திங்கள், 2 நவம்பர், 2009

இந்துமதம் எங்கே போகிறது ? பகுதி - 1 முதல் 20


நூல்: சடங்குகளின் கதை (இந்துமதம் எங்கே போகிறது? ஆசிரியர்: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்வெளியீடு: நக்கீரன் பப்ளிகேசன்ஸ், ஜானி ஜான்கான் தெரு, இராயப்பேட்டை, சென்னை-14.

காஞ்சி-சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், என்னும் வைணவப் பெரியார் (ஒரு இந்து மதப்பார்ப்பனர்)என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நக்கீரன் இதழில் “இந்து மதம் எங்கே போகிறது?” என்ற தொடர் கட்டுரையைத் தீட்டினார்.அது அப்படியே ‘விடுதலை’யிலும் வெளியிடப்பட்டது. பின்னர் நூல் வடிவிலும் வெளியாகி சக்கைப் போடு போட்டது. அதன் தொடர்ச்சியாக நக்கீரன் இணைய இதழில் ‘சடங்குகளின் கதை’ என்ற தொடரை எழுதியுள்ளார் தாத்தாச்சாரியார். நக்கீரன்’ இதழில் தொடந்து வெளி வந்த இந்த கட்டுரைகள் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. இத்தொடரை நக்கீரன் நூலாக வெளியிட்டுள்ளது. இந்நூலில் இந்து மதச்சடங்குகளை புட்டுப்புட்டு வைத்துள்ளார். சங்கர மடங்களின் சங்கராச்சாரியார்களின் இந்து மத வருணவெறி மற்றும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள பெரிதும் உதவும் என்பதால் நக்கீரனில் வெளிவந்த இந்தக் கட்டுரைத் தொடர் அப்படியே இங்கு வெளியிடப்படுகிறது.

பகுதி - 1: இந்து மதம் எங்கிருந்து வந்தது?

நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள். வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பயமுறுத்தியது பூமி. இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழி றங்குகிறாள் சிந்து. அது அந்தக்கால ஆப்கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந்து விடுவார்கள். சூரியன் மறுநாள் வந்து விளக்கேற்றிய பிறகுதான் பயம்போய் வெளியே வருவார்கள். பூமியே புதிராக தெரிந்தது அவர்களுக்கு, நதியை யார் துரத்துவது? பயந்தனர். மரத்தின் தலையைப் பிடித்து உலுக்குவது யார்? பயந்தனர். சுற்றிலும் இருள் பூசியது யார்? நடுங்கினர். இந்தப் பயத்தாங் கொள்ளிகளுக்கிடையே சிலபேர் பயப்படாமல் பார்த்தார்கள். மலை, நதி, மரம், வானம், உற்றுப் பார்த்தார்கள். அவர்களின் மூளைக் குள்ளும் சூரியன் உதித்தது. மனிதனுக்கே உரிய சிந்தனா சக்தி அந்த சிலருக்கு வயப்பட்டது. சிந்தனையை இரு கண்களிலும் ஏற்றி வைத்துக் கொண்டு பார்வையால் உலகத்தைக் குடைந்தனர்.
விளைவு...! கண்டுபிடிக்கப்பட்டது தெய்வம். இதுவரைப் பார்த்து பயந்த மரம், செடி, கொடி, மலை நதி தான் தெய்வம். இருட்டை ஓடஓட விரட்டுகிறானே அந்த வெளிச்சம்தான் தெய்வம் என்றான் உற்றுப் பார்த்தவன். (இந்த தெய்வம் என்ற பதம்தான் அய்ரோப்பியர்களால் டிவைன் (Divine) என வழங்கப்படுகிறது. ஆரியர்களில் ஒரு பகுதிதான் அய்ரோப்பாவுக்கு நகர்ந்தது).இயற்கைதான் கடவுள். துரத்தும், உலுக்கும் சக்தி தான் கடவுள். உற்றுப் பார்த்தவன், பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு ரிஷி என பெயர்.ரிஷி என்றால் பார்ப்பான், பார்ப்பான், பார்த்துக்கொண்டே இருப்பான். நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் அதற்குநாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள் உண்டாயிற்று வேதம். உற்றுப் பார்த்து சிந்தித்து சிந்தனையாளர்களால் நாகரிகம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியது.
"இந்த உலகமே தெய்வம்தான். நாம் வாழ சந்தோஷமாக வாழத்தான் தெய்வத்தைப் பயன்படுத்த வேண்டும்" -வகுத்தது வேதம். "Civilisation never born, but, it is the heritage of humanity" என பிற்பாடு அமெரிக்க அறிஞர் ப்ரைஸ் சொன்னது போல் தொட்டுத் தொடர்ந்தது நாகரிகம். முதலில் இயற்கையைப் பார்த்துப் பயந்த மனிதர்களுக்கு சிந்தனை செய்து உற்றுப் பார்த்த மனிதனான ரிஷி அறிவுரை சொன்னான். பயப்படாதே நீயும் நானும் நன்றாக வாழ வேண்டும். அதற்கு இந்த மரத்தைப் பயன்படுத்துவோம். நதிகளைப் பயன்படுத்துவோம்.இயற்கை நமக்காகத்தான் வேதம் ஒரு கட்டுப்பாடு மிக்க கலாச்சாரத்தைக் கொண்டு வந்தது. ஆரிய இனத்தவர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும்... இம் மனிதர்களிடையே இப்படித்தான் வேத மதம் பிறந்தது. இந்த நல்லெண்ணச்சிந்தனை வளர்ந்து மெருகேற்றியதுதான் சமூக அமைப்பு. கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழ கற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு என்ன செய்தார்கள்! பிரித்தார்கள். மூன்றாக பிரித்தார்கள். தங்களைத் தாங்களே நிருவாகம் செய்வதற்கு ஆள்வதற்கு ஒரு பிரிவு. அவர்கள் சொன்னபடி செய்து முடிப்பதற்கு ஒரு பிரிவு. இதோடு நிறுத்தவில்லை. ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறி முறைகளைச் சொல்லிக்கொடுத்து அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக ஒரு பிரிவு. ஆள்பவன் க்ஷத்திரியன் ஆனான். ஆளப்படுபவன் அதாவது உழைப்பவன் வைசியன் ஆனான். இவர்கள் இரண்டு பேரையும் வேதத்தை வைத்துக் கொண்டு, வேதத்தைக் கற்று நீதி நெறிப்படுத்தியவன் பிராமணன் ஆனான். ஆட்சி செய்வதற்கே நேரம் போதவில்லை என அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர் க்ஷத்திரியர்கள். உழைக்க வேண்டும். பிழைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக வியர்வை சிந்த புறப்பட்டுவிட்டார்கள் சிந்தனாசக்தி குறைந்த அப்போதைய வைசியர்கள். பிராமணர்கள் பார்த்தார்கள். இவர்கள் இருவருமே வேதத்தை விட்டு விட்டுப் போய்விட்டார்களே அதிலுள்ள கருத்துகளை கட்டளைகளை கர்மாக்களை நாம்தானே சிரமேற்கொண்டு செயல் படுத்தவேண்டும். எனவே வேதம் பிராமணர்கள் கைக்குப் போனது. இதெல்லாம் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தானில் நடந்ததாகத்தான் வேத காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன. ரிசா, குபா, க்ரமு என்கிற நதிகள் வேதத்தில் ஓடுகின்றன. இவை ஆப்கன் தேச நதிகள் என்பதால் வேதகாலம் பெரும்பாலும் ஆப்கன் பகுதியில்தான் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கின்றன. வேதத்தில் மூழ்கியிருந்தோரின் முடிவுகள். வேதம் பிராமணர்கள் கைக்கு போனதும் அறமும் தர்மமும் கர்மாக்களும் செவ்வனே நடந்தேறி வந்ததால் வேத மதம் பிராமண மதம் ஆயிற்று. ஆரிய மதம் வேதமாகி வேத மதம் பிராமண மதமாகி, காலவெள்ளத்தில் அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க, அப்போது இங்கே சுமார் 450 மதங்கள் இருந்தனவாம். இவைகளில் எது இந்து மதம்?
பகுதி - 2:

இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? படிப்படியாகப் பார்ப்போம். ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு கூட்டணி வைத்து 'சகதி' அந்தஸ்தோடு கிடக்கிறது. புருஷன் பார்த்தான் ஒரே தாண்டு இந்தப்பக்கம் வந்துவிட்டான். திரும்பிப் பார்த்தால் அவன் பத்தினி பாவமாக நின்று கொண்டிருந்தாள். தாண்டினால் விழ வேண்டியதுதான் என பயந் தாள். கொஞ்சம் கை குடுங்கோ வந்துடறேன் என்கிறாள் பத்தினி. இது உங்களுக்காக சொன்ன உதாரணம்தான். இதேபோலத்தான் அன்று ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்? நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது. வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம். ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி. வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.
மனு?.... வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு. அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம். பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை 'மனு' பிளவாக்கியது. கூடவே, இவர்களைத் தாண்டி 'சூத்திரர்கள்' என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு. பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு - சூத்திரனைப்பற்றி இப்படி எழு தியது. "சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை..." இப்படிப் போகிறது மனு. வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் 'நன்றாகவே' வேலை செய்தது. ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர்களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர். அடே... குழந்தாய் இந்தா பால். இதைக் குடித்து மகிழ்வாய் வாழு' என்ற வேதத்தை மனு திரித்து... "இந்த பாலை இவன் குடிக்க வேண்டும்... இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்கவேண்டும்" என பிளவு செய்தது. ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன்னேன் அல்லவா? இதற்குக் காரணம் என எடுத்துக்கொள்ள ஏதுவான மனு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.
"பால்யே பிதிர்வஸே விஷ்டேது
பாணிக்ரஹா யௌவ் வனே
புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது
நபஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்"
"பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள், ஆண் சொல்படி கேள்". இப்படி 'பெண்ணுரிமை' பேசும் மனு இன்னொரு இடத்தில் சொல்கிறது. "பெண்கள் அசுத்தமானவர்கள் உனக்கு விதிக்கப்பட்டுள்ள மந்த்ரோப தேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே..." பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது. மனுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு 'பூம் பூம்' மாடுகள்போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள். வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. "கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாவியாவாய்" என மந்த்ரங்களால் மிரட் டப்பட்டனர் மக்கள். பல நூறு வருடங்கள் ஒரு கிரிமினல் லா போன்றே மனுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன், க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். இப்படிப்பட்ட ஒரு 'சாஸ்திர ஏகாதிபத்ய' சூழ்நிலையில்தான் இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது. கடவுள் பெயரை சொல்லியும் கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே? உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? கடவுளா? அவன் எங்கே இருக்கிறான்? வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மனு வேண்டாம். கடவுள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும் தான் வேண்டும். என அந்த சூழ்நிலையில் மிகமிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல். இன்றைக்கு அணு குண்டு வெடி சோதனைக்கே 'புத்தர் சிரித்தார்' என பெயர் வைக்கிறோம். அன்றைக்கு புததரே வெடித்தார் என்றால் விளைவுகள் என்ன.

பகுதி - 3

வேதத்தின் பெயரைச் சொல்லி கர்மாக்கள் அரங்கேறிக் கொண்டிருந்ததை எதிர்த்து புத்தர் எழுப்பிய குரலை போன அத்தியாயத்தில் கேட்டோம். குரல் கொடுத்த பின்னணி, அடுத்தபடியாக அவரது செயல்கள் எப்படி இருந்தன? விளைவுகள் என்ன சம்பவித்தன? என்பதுபற்றி இப்போது பார்க்கலாம். சகல சவுபாக்கியங்களையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோதராவோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக்கியம் பளிச்சிட்டது. இனி பெண் சுகம் வேண்டாம். இல்லற சுகம் வேண்டாம். வெளியே போகலாம். அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கலாம். என மூளைக்குள் முடிவெடுத்தார். சட்டென இளம் மனைவி யசோதராவையும், பிஞ்சு மகன் ராகுலையும் விட்டு விட்டு வெளியே போய் விட்டார். வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட்சிகள் தான் புத்தரை போராட்ட களத்துக்கு கொண்டு சென்றன. எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப் புகை. அந்தப் புகையில் புறக் கண்களும் தெரியாமல், அக அறிவுக் கண்களும் தெரியாமல் துழாவிக் கொண்டிருந்தனர் மக்கள். ஏன் அக்னிப் புகை? பிராமணர்கள் சொன்னார்கள், "ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல்லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண்டும். வேதம் பயின்ற நாங்கள் யாகம் நடத்துகிறோம். பிராணிகளையும், தட்சணையையும் கொடுத்து நீங்கள் புண்ணியம் பெறுங்கள்" என அக்னிப் புகைக்கிடையே அழுத்தமாய் சொன் னார்கள்.(அந்த காலத்திலேயே பிராமணர்கள் பசுவை பலியிட்டிருக்கிறார்களா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். பசு என்றால் சமஸ்கிருதத்தில் நாலுகால் பிராணி என பொருள் பிற்காலங்களில் பசு என்றால் கறவை மாடு என வழங்குவது வழக்கமாகி விட்டது. தமாஷுக்காக இப்போது நாலு சக்கர பஸ்ஸைகூட பசு என கூறினாலும் கூற லாம்). அந்த புகைக்கிடையே பிராமணர்கள் மந்திரங் களை சொல்லச் சொல்ல ஒன்றும் புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். காரணம், அன்று மக்கள் பேசியது பிராக்ருத மொழி. அவர்களுக்கு சமஸ்கிருத மந்திரங்கள் புரியவில்லை. அதில் என்ன சொல்லப்பட்டி ருக்கிறது என்றும் தெரியவில்லை. புத்தர் இதை பார்த்தார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டுமானால், அவர்களின் மொழியான ப்ராக்ருதத்திலேயே கருத்துகளை பரப்பவேண்டும் என முடிவெடுத்தார். அப்போதுதான் அசுவமேத யாகத்தின் கொடூ ரங்களையும், ஆபாசங்களையும் கண்கூடாக கண்டார் புத்தர். அதென்ன அசுவமேத யாகம்?
ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம்தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள். இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப்போது ஓரிரவு முழுவதும் சம் பந்தப்பட்ட ராஜா வீட்டுப் பெண்கள் முக்கியமாக மாகராணி குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான். இதைக் கூற சவுஜன்ய(கூச்சம்)மாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, அசுவமேத யாக ஸ்லோகமே அப்படித்தானே இருக்கிறது. "அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து
பத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே" என போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி வழிபட வேண்டிய முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம். இரவு இந்த கடமை முடிந்ததும் மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வமேத யாகம். மக்களைபோலவே,ராஜ குடும்பத்தினரும் பிரமாணர்களின் மந்த்ர யாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும் "ஏ... ராஜா, இந்த யாகத்தை நல்ல விதமாக பூர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும், பொருளும் தட்சணை கொடுத்தாய். அஃதோடு யாகத்தில் பங்கு கொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணை யாக்கி பிறகு அழைத்துச் செல்லவேண்டும்" என்றார்களாம். இதையெல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். "மனித தர்மம் மிருக காருண்யம் இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே? ஏன் இப்படி...?" என யாகம் நடந்த இடத்துக்கே போய் கேள்விகள் கேட்டார். பிராமணர்கள் பதில் சொன்னார்கள்:"குதிரைக்கு மோட்சம் கிடைக்கும் லோகத்துக்கு க்ஷமம் கிடைக்கும்" என்று. புத்தர் திரும்ப கேட்டார்."ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப் போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே. எல்லாம் அறிந்த பிராமணனாகிய நீங்கள் மோட்சம் பெறவேண்டாமா? அந்த அக்னி குண்டத்தில், யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக்கும் மோட்சம் கிட்டும் அல்லவா?"
ப்ராக்ருத மொழியில் மக்களிடம் இதே கேள்வியை புத்தர் பரப்ப திடுக் கிட்டுப் போனார்கள் பிராமணர்கள்.


பகுதி - 4:

முரட்டுத் தனமாக ஓடித்திரியும் குதிரைகளுக்கே மோட்சம் கிடைக்கும்போது, மென்மையாய் வேதம் ஓதும் உங்களுக்கு அந்த அக்னி குண்ட மோட்சம் வேண்டாமா?...
-என புத்தர் வேள்விச் சாலைக்கே சென்று ஒரு கேள்விப் பொறியை போட யாகத்தைவிட பெருநெருப்பாய் கிளம்பியது இந்த ஒரு நெருப்பு. காகம் கொத்தி லமரம் சாயுமா?ஆலமரம் போல் வேர்களையும், விழுதுகளையும் மண்ணுக்குள்ளும், மக்களுக்குள்ளும் ஊன்றி வைத்திருந்த வேத கட்டுப்பாடுகள், மநு கட்டளைகள் ஆகியவற்றின் முன் புத்தரின் கொள்கை முழக்கம் முதலில் தடுமாறினாலும் கொஞ்சம் கொஞ்சமாய் வலுப்பெற தொடங்கியது. முதலில், உடனடி அழிவிலிருந்து பிராணிகளை காப்பாற்றுவது, பிறகு, மெல்ல மெல்ல கவ்வும் அழிவிலிருந்து மக்களை காப்பாற்றுவது என முடிவெடுத்த புத்தர் தன் சிந்தனையோடு ஒத் துப்போகும் சில வாலிபர்களை தேர்ந்தெடுத்தார். புத்தருக்கு அப்போது முப்பது வயது இருக்கலாம். முறுக்கேறிய தேகம் முன்னேறும் கண்கள். ஓயாத சிந்தனை தனக்கே உரிய குணங்களைப் பெற்றிருக்கும் அவர்களோடு சாலை சாலையாக நடந்தார். எங்கேனும் வேள்விச் சாலை அனல் அடித்தால் அங்கே விரைந்து சென்றது புத்தர் படை. யார் நலனுக்காக யாகம் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறதோ அவர்களை அணுகியது பாரப்பா இப்படி உயிர் களைப் பலிகொடுத்து உனக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது? சென்ற முறை பக்கத்தில் ஒருத்தன் பல யாகங்கள் நடத்தினான் பொருள் செலவு தான் மிச்சம். அவன் கண்ட பலன் ஒன்றுமில்லை. நீ பலி கொடுக்கும் நாலு கால் பிராணியை நீயே தீனியிட்டு வளரு. அது இறந்து கொடுக்காத பலனை இருந்து கொடுக்கும். இந்த வைதீக கர்மாக்களை நம்பாதே. ஒருவனுக்கு இழப்பும், ஒருவனுக்கு பிழைப்பும் கொடுக்கும் மோசடி வித்தை ப்ராகிருத மொழியில் பிளந்து கட்டியது புத்தர் குழாம். இதைக்கேட்ட யாகம் நடத்துபவர்கள் உடனடியாக நிறுத்தவில்லை என்றாலும் இனிமேல் யாகம் நடத்தமாட்டோம் என புத்தரிடம் உறுதி தந்தனர். புத்தர் நடந்தார். வீடு வீடாய்ச் சென்றார். இப்போது தேர்தல் வந்தால் கட்சிக்காரர்கள் வீட்டு எண்களைப் பார்த்துப் பார்த்துக் கும்பிடுவார்களே அதேப்போல ஆனால் பதவியை எதிர்ப்பாராமல் ஒவ்வொரு வீடாய்ப் புகுந்தார் புத்தர். யாகங்கள் நடத்தாதீர்கள். நெருப்புக்குள் உயிர்களைப் போட்டு கொல்லாதீர்கள். உங்கள் அறிவைப் பயன்படுத்தி வாழுங்கள். இதுதான் புத்தோப தேசம்
இங்கே முக்கியமான ஒரு செய்தியை குறிப்பிட்டாக வேண்டும். புத்தருக்கு நெடுங்காலம் கழித்து தோன்றிய கிறிஸ்தவ மதத்தின் புனிதநூல் பைபிளில் மைக்கேல் கூறுவதாக கீழ்க்கண்ட வாசகங்கள் அமைந்துள்ளன. "Don't pour innocent matters into the fire. God wants your love only" ஒன்றும் அறியாத அப் பாவி ஜீவன்களை நெருப்புக்குள் போட்டு எரிக்காதீர்கள். கடவுள் இதை விரும்புவதில்லை. அவர் உங்கள் அன்பை மட் டுமே விரும்புகிறார் என கிறிஸ்தவ புனித நூலில் சொல்லப்பட்ட கருத்தை மிக மிக மிக முன்கூட்டியே வீடுவீடாகக் சென்று சேர்த்தவர் புத்தர். "Anti Vedic" வேத எதிர்ப்புக் கொள்கையை இன்னும் முழுவீச்சில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமானால் மக்கள் மனதில் பதியும் சில அடையாளங்களை பெற்றிருக்க வேண்டும் என ஜனரஞ்சகமான முடிவுக்கு வந்தார் புத்தர். என்ன செய்யலாம்? மொட்டையடிக்கலாம் ஆடையைக் குறைக்க லாம். இவை வெளிப்புற அடையாளங்கள். தலையிலிருந்து ரோமங் களையும், உடலிலிருந்து உடையையும் களைந்தது போல், மனசிலிருந்து ஆசையைக் களைய வேண் டும். பெண்ணாசை, பொருளாசை துறந்து விட்டு வீட்டை திறந்து வெளியே வந்துவிட வேண்டும்.தனி குழாமுக்கு இப்படி அழைப்பு விடுத்தார். குவிந்தனர். வீட்டை விட்டு வெளியே வந்தாகி விட்டது. இனி மக்களிடம் நம் கொள்கையைப் பரப்புவதுதான் முழு முதல் வேலை. வேறொருவர் வீட்டிலும் தங்கக் கூடாது. எங்கே போவது? உருவாகின புத்த விஹாரங்கள். சிறு சிறு எளிய குடில்கள். புத்த சன்யாசிகள் என (Buddhist monks)பிட்சுகள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட கோயில் போன்ற ஸ்தலங்கள் தான் விஹாரங்கள் என அழைக்கப்பட்டன. மக்கள் பேசும் மொழியான ப்ராக்ருதத்திலேயே புத்த பிட்சுகளின் பிரச்சாரங்களும் போதனைகளும் பரவத் தொடங்கின. விஹார்களின் எண் ணிக்கை சரசரவென அதிகரிக்க ஆரம்பித்தது. இன்றைய பிஹார் மாநிலத்துக்கு இப்பெயர் வர காரணமே அங்கே புத்த விஹார்கள் எக்கச்சக்கமாய் இருந்ததுதான் காரணம் என்ன ஒரு வரலாற்றுக் குறிப்பும் உள்ளது. புத்தர் காலத்துக்குப் பிறகும் அவருடைய ஞான மார்க்கம் பரவி பெருகிய நிலையில்தான் பிராமணர்கள் தங்கள் கர்மமார்க்கத்தை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்தனர். உயிர்ப்பலிகளை குறைக்க முடிவெடுத்தனர். பிராமணர்களின் மிகப் பெரிய பலமே யாரிடம் எது நல்லதாக இருக்கிறதோ அதை தங்களுக்கு ஸ்வீகாரம் செய்து கொள்வது தான். ஆங்கிலத்தில் 'Adoption' என சொல்வோமே புத்த இயக்கத்திடமிருந்து ஜீவகாருண்யத்தை மட்டுமா ஸ்வீஹரித்தார்கள். இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே பேசப்படுகின்றதே இதுபோன்ற மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்துதான் பெற்றார்கள் பிராமணர்கள். மெல்ல மெல்ல புத்த இயக்கத்தினர் வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்தனர் பிராமணர்களும் பின்தொடர்ந்தனர்.
பகுதி - 5:

புத்தம் சரணம் கச்சாமி...தர்மம் சரணம் கச்சாமி... சங்கம் சரணம் கச்சாமி... என்ற மெல்லிய கோஷங்கள் தென்னிந்தியாவின் தொண்டை மண்டலக் காற்றில் கலக்க ஆரம்பித்த காலம். இங்கே தமிழ் பண்பாடு நாகரிகத்தின் உச்சியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. சங்க இலக்கியங்கள் இயற்கை, இறைமை, காதல், பக்தி என சகல விசேஷங்களையும் தொட்டு தமிழாட்சி நடத்திக் கொண்டிருந்தது. பொதுவாகவே உலக அளவில் வழிபாட்டு முறையில் ஓர் ஒற்றுமை இருந்து வந்துள்ளது.
(i) கல்லை வழிபடுதல்-Fetish worship
(ii) விலங்குகளை வழிபடுதல்-Totemism worship
(iii) மனித- உரு செய்து வழிபடல்-Shamnaism worship
(iஎ) விக்ரம், சிலை செய்து வழிபடுதல்-Idol worship
நாகரிக பண்பாட்டு வளர்ச்சியின் அடிப்படையில் இந்த வழிபாட்டு முறைகளும் வளர்ச்சி கண்டு வந்தன. தமிழ் நாகரிகமோ சிற்பக்கலையில் தேர்ந்து விளங்கியது. பழங்கால மன்னர்கள் தங்கள் ஆட்சியின் பெருமைகளை வரலாறு தாண்டி உரத்துச் சொல்லும் அளவுக்கு சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டி அங்கே தெய்வச் சிலைகளை எழுப்பி வழிபாடு நடத்திவந்தனர்.
வழிபாடு என்றால்?
தமிழன் கல்லை சிலையாக்கும் நுண்மையான வன்மை கொண்டவன் என்றாலும் அதே அளவுக்கு மென்மை தன்மையும் அவனிடத்தில் மேவிக் கிடந்தது. பூக்களை பறித்து அவற்றால் வழிபாடு நடத்த ஆரம்பித்தான். அருகில் அணையாமல் நந்தா விளக்கு எரிந்து கொண்டே இருக்கும் தீப வெளிச்சத்தில் பூக்களால் நடத்தப்பட்டதுதான் தமிழனின் முதல் வழிபாடு. பூசெய்= பூவால் செய் இது இணைந்ததுதான் பூசெய் பூசை என இப்போதைய வார்த்தையின் வடிவம் தோன்றியது. இதனை திராவிட மொழியியல் ஆராய்ச்சியாளர் எஸ்.கே.சாட்டர்ஜி தனது ஆராய்ச்சி நூலில் எடுத்துக் காட்டுகிறார். வழிபாடு மட்டுமல்ல பக்தியிலும் தமிழினம்தான் முன்னோடியாக இருந்திருக்கிறது. நீ உன் மனைவியிடம் காட்டும் அன்பை கடவுளிடம் காட்டு என பக்திக்கு இலக்கணம் வகுத்தது பரிபாடல். 'நாயக' நாயகி பாவம்' என்ற பக்தி வடிவத்தை உலகுக்கு கொடுத்ததே தமிழ் இனம்தான். இவ்வாறு கடவுளை காதலியாகவும், காதலனாகவும் உருவகிக்கும், வர்ணிக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது தமிழ்ப் பண்பாடு. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் புத்தம் மற்றும் சமண கொள்கைகள் தமிழ்நாட்டில் பரவின. பரவின என்றால் சும்மா அல்ல தெற்கே திருநெல்வேலிவரை சமணம் பரவிவிட்டது. நாகப்பட்டினம்வரை புத்தம் புகுந்து விட்டது. வடஇந்தியாவில் புத்திஸத்தால் எதிர்க்கப்பட்ட வேத பிராமணர்கள் நகர்ந்து நகர்ந்து தென்னிந்தியாவைத் தொடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் மகேந்திர பல்லவ ராஜா என்றும் கருத இடமுள்ளது. புத்தர் இனத்தவர்கள் தமிழினத்தவரோடு 'சம்மந்தி' உறவு முறை வரை நெருங்கிவிட்ட நிலையில் பல்லவ ராஜாக்கள் வேதத்தை வேத நெறிமுறைகளை இங்கே விதைத்து வைத்தனர். புத்த போதனைகளால் எதிர்க்கப்பட்ட வேத போதனைகள் இங்கே பிராமணர்களால் மறுபடியும் தலை தூக்கின.
பிராமணர்கள் இங்கே வந்தபோது அவர்கள் அணிந்திருந்த நூல் அதாவது பூண்டிருந்த நூல் அதாவது பூணூல் (இப்போது பெயர்க்காரணம் புரிகிறதா) பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் இங்கிருந்தவர்கள். என்ன இது? என கேட்க அதற்கு பிராமணர்கள் பதில் சொன்னார்கள். 'சமூகத்தில் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதற்காக அணிவிக்கப் பட்டிருக்கும் அந்தஸ்து' ஆனால் உண்மையில் இந்த பூணூல் வந்த கதை வேடிக்கையானது. வேத கர்மாக்களை நிறைவேற்றுவதற்கான சடங்குகளில் ஈடுபட்டிருக்கும்போது வஸ்திரத்தை தோள்பட்டை வழியாக மார்புக்கு குறுக்காக அணியவேண்டும் என்பது வேதம் வகுத்த விதி. அதேபோல் அணிந்து பார்த்தார்கள். கைகளை உயர்த்தி வேள்விச் செயல்களில் ஈ டுபடும்போது அடிக்கடி அமர்ந்து எழுகின்றபோதும் வஸ்திரம் அவிழ்ந்து நிலை மாறிவிடுவதால் இது நிலையாகவே இருக்க என்ன வழி என்று பார்த்தார்கள். இதே போல மெல்லியதாய் அணிந்தால் பணி செய்யும்போது உபத்திரவம் செய்யாமல் இருக்குமே என யோசித்தனர். வஸ்திரம் நூலானது அதுவே பூணூலானது. இதை 'அந்தஸ்து' என வழங்கிக் கொண்ட பிராமணர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் வகையில் புத்த, சமண கொள்கைகளை பின்பற்றுவதில் கஷ்டங்கள் இருந்தன. சமண கொள்கைப்படி உயிர்களை அதாவது எறும்பைக்கூட கொல்லக்கூடாது. நடக்கும்போதுகூட பூமிக்கு நோகக்கூடாது மேலும் இரு கொள்கைகளுமே கடவுளை முக்கியப்படுத்தவில்லை என்பதால் கொஞ்சம் கொஞ்சமாய் மங்க ஆரம்பித்தன. இந்த மகாகொள்கைகள் இந்த மாற்றங்கள் நடந்த பிறகு தமிழ்நாட்டில் வேதம் வழிந்தோடியது கிடைத்தது. இங்கேயுள்ள மிகச் சிறந்த சிலைகளை பார்த்த பிராமணர்கள் "இவை வெறும் கல்லாகவே இருக்கின்றன. நான் என் மந்த்ரத்தன்மை மூலம் இவைகளை தெய்வமாக்குகிறேன்" என்றனர். பூசெய் என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள். பூ, நந்தாவிளக்கு என இருந்த தமிழர் வழிபாட்டில் மட்டுமா?கலாச்சாரத்திலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள் என்னென்ன?

பகுதி - 6

தமிழ் பூக்களால் தமி ழர்கள் செய்த பூஜை (பூ செய்) எப்படி பூஜையானது என பார்த்தோம். இதுமட்டுமல்ல இன்னும் பல வகைகளில் தமிழர்களின் வழிபடுமுறை மாறிப்போனது. சிற்பக் கலைகளில் ஓங்கி உயர்ந்திருந்த தமிழர்கள் பல பெண் உருவச் சிலைகளை வடித்தனர். சிறு சிறு குழுக்களுக்கு ஊர்களுக்கு அவற்றை காவல் தெய்வமாக வைத்தனர் அச்சிலைகளின் முன் நின்று உரத்த குரலில் 'ஏ... காவல் காக்கும் அம்மா... என் வீட்டில் மாடுகள் நிறைய கொடு... எங்கள் ஊருக்கு மழையைக் கொடு... என அச்சிலை முன் நின்று சத்தம் போடுவார்கள். ஏன் என்று கேட்டால்... சிலைக்கு கல் காதல்லவா? அதனால் நாம் உரக்கச் சத்தம் போட்டால்தான் நமது வேண்டுகோள் அச்சிலையின் காதில் விழும். அப்போதுதான் நமது கோரிக்கை நிறைவேற்றப் படும்... என்பது நம்பிக்கை. இப்படியே கொஞ்ச காலம் போக... ஒருவன் சொன்னான் நாம் நமக்குள் பேசுவதுபோல பேசிக்கொண்டிருந்தால் சிலையின் காதில் கேட்குமா? க்ரீம் த்ரீம் ப்ரீம்... என அடிவயிற்றிலிருந்து அதிரும் படியான சொற்களை உச்சரித்தால் அந்த அதிர்வில் சிலையின் காது திறக்கும் என்றான். இந்த உரத்த வழிபாடு ஒருபக்கம் நடந்துகொண் டிருக்க தமிழர்களுக்கு கைகூப்பகற்றுக்கொடுத்தார்கள் பிராமணர்கள். எப்படி? தொடக்க கால ஆரியர்களோடு தாஸே எனும் பழங்குடியின மக்கள் பல வகைகளில் மோதினர். சிந்தனை சக்தியில்லாத முரட்டுக் கூட்டத்தை உயர உயரமாய் இருந்த ஆரியர்கள்
பதிலுக்குச் சண்டையிட்டு வெல்ல அப்போது தாஸே இனத்தவர்கள் ஆரியர்கள் முன்குனிந்து இரு உள்ளங் கைகளையும் பிணைத்து 'இனி உங்களை தாக்கமாட்டோம் என அடிபணிந்தனர். அதுபோல வைத்துப் பாருங்கள் கும்பிடுவது போல் தோன்றும். அந்த 'தாஸே' இனப்பெயரிலிருந்துதான் தாஸன் என்ற சொல் முளைத்தது. தாஸன் என்ற சொல்லுக்கு அடிமை என்ற அர்த்தமும் அதன் வழியேதான் முளைத்தது. தங்களை அன்று கும் பிட்ட 'தாஸே' இன மக்கள் மாதிரியே... பிற்காலத்தில் தெய்வங்களை வழிபடக் கற்றுக் கொடுத்தனர் பிராமணர்கள் கடவுளுக்காக கை கூப்ப வைத்த பிராமணர்கள் படிப்படியாக தமிழர்களின் உரத்த வழிபாட்டிற்குள்ளும் ஊடுருவினார்கள்."நாம் பேசுவதையே தெய்வத்திடம் பேசினால் அதற்குக் கேட்குமா? நாங்கள் சில மந்திரங்கள் சொல்கிறோம். அதை உச்சரித்தால்தான் உன் சிலைக்கு தெய்வ சக்தி வரும். தவிர மனிதர்களுக் குள் பேசும் மொழியை நீங்கள் தெய்வத்திடம் எப்படி பேசுவீர்கள்? என வேத சமஸ்கிருத மந்த்ரங்களை அச்சிலை முன்னர் கூறத் தொடங்கினார்கள். புதிதாக இருக்கிறதே என கேட்க ஆரம்பித்த தமிழர்கள்தான் இன்றுவரை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் வேதத்தில் சொல்லப்பட்டிருப் பது என்னவென்றால் கடவுளுக்கு உருவம் கிடையாது. உபநிஷத்துகள் உப தேசிப்பது என்னவென்றால் "கடவுளுக்கு உருவம் எதுவும் கிடையாது. உருவம் இல்லாததுதான் உண்மையான உருவம்."வேதம், உபநிஷத்து இவற்றையெல்லாம் தாண்டிக் குதித்து தமிழகத்தில் சிலைகளுக்கு முன்னாள் மந்திரம் சொல்ல ஆரம்பித்தான். தமிழன் வழிபாட்டு முறையான பூவோடு தெய்வம் சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டாமா? பழம் கொண்டு வா, அன்னம் கொண்டு வா' தொடங்கியது படையல் பண்பாடு. நந்தா விளக்கு தீபம், பூ இவற்றோடு வழிபாட்டு பொருள்களுக்கான பட்டி யலில் பழம் சேர்ந்தது. உணவுப் பொருள்கள் சேர்ந்தன. தமிழ் மட்டும் தள்ளி வைக்கப்பட்டது. வழிபாட்டு முறையில் மாற்றம். அடுத்தது சமூக ரீதியாக மாற்றங்கள் உண்டாக வேண்டியதுதானே நியதி? உண்டானது. கலாச்சாரத்தின் முதல் மாற்றம் கல்யாணத்தில் தொடங்கியது. தமிழர்களின் கல்யாணமுறை எப்படி இருந்தது என தெரிந்து கொண்டால்தானே அது எவ்வாறு மாறியது என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும். இலக்கியங்களை சித்தரிப்பது போல களவியல் என்பதுதான் பழந்தமிழர்களின் திருமணமுறை அதென்ன களவியல்? பெண்ணொருத்தி பூப்பெய்துகிறாள் உறவுப் பெண்கள் சுற்றிலும் மகிழ்ச்சி பொங்க முற்றுகையிட்டிருக்கிறார்கள். பெண்மை, தாய்மை என்னும் பெருமைக்கெல்லாம் அடிப்படையே இந்த திருநாள்தானே. அதனால்தான் சுற்றத்தின் முகத்தில் மகிழ்ச்சி. அந்த யுவதியின் முகத்தில் வெட்கம். இதை பக்கத்து வீட்டுக் காளை பார்த்து பூரிக்கிறான். அவளது அழகு அவனை அழைப்பதாய் அவனுக்குத் தோன்றுகிறது. பெண்மையின் முதல் வெட்கத்தின் முகவரி அவள் முகத்தில் தெரிகிறது. அதை படிக்க அந்த காளை ஆசைப்படுகிறான். சுற்றிலும் உறவினர்கள். பெண்களின் பாதுகாப்பு அன்ன நடை போட்டா அவளை அடைய முடியும்? பொறுத்திருக்கிறது காளை. பொழுது சாயத் தொடங்கிய உடன் பாயத் தயாராகிறது. ராத்திரியின் மெல்லிய ஒளியில் தன் ராணியை நெருங்கியவன் நேரம் காலம் பார்ப்பதில்லை. ஒரே தூக்கு. அந்த ஆளான அழகை தன் இளங்கரங்களில் ஏந்தி சிற்சில நொடிகளில் சீறிப்பாய்ந்து மறைகிறான். ருதுவான மங்கை மாய மாய்ப்போன பின்னே தேடுகிறார்கள். சுற்றுவட்டாரத்தையே அப்பெண்ணின் ஆண் உறவினர் கூட்டம் அணு அணுவாய் அலசுகிறது. கடைசியில் அந்த ஜோடி ஜொலித்துக் கொண்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடுகிறது கூட்டம். பக்கத்து வீட்டு காளை அவளை பருகி நெடுநேரம் ஆகியிருந்தது.
கையும் களவுமாக பிடித்தபின் *என்ன தண்டனை தெரியுமா?

பகுதி - 7

கன்னியை தூக்கிக்கொண்டு ஓடிய அந்தப் பக்கத்து வீட்டு காளைக்கு தமிழ்க்கூட்டம் என்ன தண்டனை கொடுத்தது தெரியுமா? இதோ பாரடா நீ அவளை தொட்ட முதல் ஆண்மகன். அதனால் அவள் உனக்குரியவள்தான். உன்னுடன்தான் வாழ வேண்டும் அவள் என இரண்டு பேரையும் சேர்த்து வைத்தது தீர்ப்பு. இஃது களவியல் என்றால் தமிழர்களின் இன்னொரு சிறப்பு, சங்கப்பாடல் ஒன்று சொல்கிறது பாருங்கள். காதலை அஃதாவது கற்பியலை.யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே...'' நானும் நீயும் யார் யாராகவோ இருந்தோம். என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் சொந்தக்காரர்கள் என்றும் தெரியாது. நானும், நீயும் எங்கிருந்து வந்தோம் எனவும் இப்போது தெரியவில்லை.ஆனாலும்இந்த அறிமுகங்கள் எல்லாம் தேவையே இல்லாமல் அன்பு கொண்டோம் எப்படி தெரியுமா... செம்மண்ணிலே பெய்யும் மழைநீரும் செந்நிறம் அடைந்துவிடுகிறதே. அதுபோல அன்பு கொண்ட நம் நெஞ்சங்கள் இரண்டும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டது. இப்படி காதல் வாழ்க்கையிலும் நாகரிகத்தின் சிகரத்தில் இருந்தனர் தமிழர்கள். இவ்வாறு களவியல், கற்பியல் இரண்டு விஷயங்களிலுமே முன்னணியில் இருந்த தமிழர்களின் கல்யாணங்களில் `தாலி' வந்த கதை சுவாரஸ்யமானது. திருநெல்வேலி போன்ற பனைமரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில், ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்துகொண்டான் என்றா பனையோலை ஒன்றை சிறிய அளவில் நறுக்கி அதில் இந்தப் பெண் இந்த ஆணுக்கு உரியவள் என எழுதி ஒரு நூலில் கோர்த்து கழுத்தில் கட்டி விடுவார்கள். பனைமரத்துக்கு `தால்' என்றும் பெயர் உண்டு. பனையோலையில் எழுதிக் கட்டுவதால் அந்த சிறு ஓலைக்கு தாலி என்று பெயர் வந்தது. பிறகு இந்தத் தாலியில் பெயருக்கேற்றவாறு பனையோலை இல்லாமல் பவுன் கட்டித் தொங்கவிட்டதெல்லாம் மாற்றத்தின் அடையாளங்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு களவியல் செய்கிறீர்களே இவ்வளவு மகிழ்ச்சியுடன் காதல் மணம் புரிகிறீர்களே? இவற்றையெல்லாம் முறைப்படி சடங்குகள் செய்து விழாக்களாக கொண்டாடினால்தானே மகிழ்ச்சி என்றும் கூடும்?''
கல்யாண கலாச்சாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள். ஒன்றா, இரண்டா? எக்கச்சக்க சடங்குகள். என்னென்ன.... ஒவ்வொன்றாய் சொல்கிறேன்.
1. திருமணத்துக்கு முன்பே இந்த பெண்ணுக்கு இவன்தான் கணவன் என்பதை நிர்ணயிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பெண் தரப்பில் பொருள்களை மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கவேண்டும். இதற்கு பெயர் நிச்சயதாம்பூலம்.
2. கல்யாணச் சடங்குகள் ஆரம்பிக்கின்றன.
முதலில் காசி யாத்திரை.
சந்நியாசம் வாங்கவேண்டுமென்றால் மகனே கல்யாணத்துக்கு முன்னரே நீ சந்நியாசம் வாங்கிவிட வேண்டும். அதைவிட்டு கல்யாணத்துக்குப் பிறகு துறவறம் போகிறேன் என சொல்லி பெண்ணின் வாழ்வை படுத்தாதே என சூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் கல்யாணத்துக்கு முன் `காசியாத்திரை' என்றொரு சடங்கு. அதாவது மாப்பிள்ளை குடைக்கம்பை பிடித்துக்கொண்டு காசிக்கு புறப்படுவதுபோல `பாவ்லா' (Drama) செய்யவேண்டும். மாப்பிள்ளையை சமாதானப்படுத்தி மறுபடி திருமணத்துக்கு அழைத்துப் போவார்கள்.
3. ஊஞ்சலாட்டுதல்
குழந்தாய்... நீ பெண்ணோடு சந்தோஷமாக இருக்கும்போது அவருடன் ஊஞ்சல் பலகையில் அமர்ந்து ஆனந்தமாய் ஆடுவாயாக என்பது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது
கல்யாணம் என்றால் மஹஸ். அதாவது (Festival) கொண்டாட்டம் இதற்காகத்தான் ஊஞ்சல்.
4. மாலை மாற்றுவது:
இது க்ஷத்திரியர்களின் கலாச்சாரம். மணமகனும், மணமகளும் சுக துக்கங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் மாலை மாற்றிக் கொள்வார்கள்.
5. திருஷ்டி சுத்தி போடுவது. மணமக்களுக்கு யார் கண்ணும் பட்டுவிடக் கூடாது என்பதற்காக உறவினர்கள் எல்லாம் மணமக்களுக்கு திருஷ்டி கழிப்பார்கள்.
6. நீராஜனம் எனப்படும் ஆரத்தி எடுப்பது.
7. இது முக்கியமானது. பெண்ணும், பையனும் இப்போதுதான் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ளவேண்டும். மந்த்ரங்கள் ஒலிக்க... பெண்ணை உட்கார வைத்து அவள் தலையில் தண்ணீரை மெல்ல மெல்ல ஊற்றி குளிப்பாட்ட வேண்டும்.
8. பிறகு... முழுக்க நனைந்த அவளை... உள்ளே அழைத்துச் சென்று மணமகனே அவளுக்கு
புடைவை உடுத்திவிட வேண்டும். அவளது நனைந்த புடைவையை களைந்துவிட்டு... புதுப் புடைவையை மணமகன் உடுத்திவிடும்போது... இந்த சேலை வளர்வதுபோல் நம்முடைய மகிழ்ச்சி. சந்ததியெல்லாம் வளரவேண்டும் என்பதற்காகத்தான் இப்புடைவைச் சடங்கு. இன்னும் இருக்கும் கல்யாணச் சடங்குகளையும்... அவை மறுபடியும் எப்படி மாறின என்பதையும் அடுத்து பார்ப்போம்.

பகுதி – 8
கல்யாண கலாச்சாரத்தில் பிராமணர்கள் கொண்டு வந்த சடங்கு சம்பிரதாயங்களில் இதுவரை ஏழு பார்த்தோம். எட்டாவது சடங்கு பாணிக்ரஹனம். பாணிக்ரஹனம். இதுதான் முக்கியமான சடங்கு. `கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழி’ என ஆண்டாள் பாசுரம் போலவும், மேற்கத்திய கலாச்சாரத்தில் `கை’ப்பற்றுவதுபோலவும் அமைந்தது இச்சடங்கு. மணமகள் – மணமகனை கைப்பிடிப்பது! இனி வாழ்விற்கு நீதான் இணை, துணை, எல்லாம் நீயே என்ற அர்த்தத்தில் இருவரும் கைப்பிடித்துக் கொள்வதுதான் கல்யாணத்தின் முக்கிய அம்சம்.
9. கைத்தலம் பற்றிய பின், மணமகள் 7 அடி எடுத்து வைக்கவேண்டும். எதற்காக தெரியுமா?
முதல் அடி அன்னம் பெருகவேண்டும் என்பதற்காக. இரண்டாவது அடி அந்த அன்னம் உண்டபின் செரிக்க வேண்டும், மூன்றாவது அடி கணவனுக்காக விரதங்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்பதற்காக… நான்காவது, குடும்பம் சந்தோசமாக விருத்தியாக வேண்டும் என்பதற்காக… 5-ஆவது அடி வீட்டில் மாடுகள் பெருகவேண்டும் என்ற வேண்டுதலுக்காக… 6-ஆவது அடி வைப்பது குடும்பத்தில் அய்ஸ்வர்யம் (செல்வம்) கொழிப்பதற்கு… 7-ஆவது அடி இந்த சகல சவுபாக்கியங்களும் சேர்ந்து கிடைக்க… தாலிக்கு அதாவது, `நம் குடும்பம் இனிமேல் ஒன்று. உன் அப்பா யாரோ. என் அப்பா யாரோ… ஆனால், இன்று முதல் நாம் ஒன்று’ என சங்கப் பாடல் படித்தோமே அதே பொருளுக்காக… யாகத்தை நெருங்குவதுதான் 7-ஆவது அடி.
இந்த சடங்குகளோடு தமிழ்த் தாலியையும் சேர்த்தனர். இப்படியாகத் தூக்கிப் போவது, காதலிப்பது என சம்பிரதாயங்களில் சிக்காமல் இருந்த தமிழ் திருமண முறையும், பிராமண திருமண முறையும் திருமணம் செய்துகொண்டன.
இதன் விளைவாக தமிழனின் களவியல், கற்பியலில் மந்த்ர இயல் புகுந்தது. சடங்குகள் பிறந்தன. கல்யாணம் என்பது வேதக் கட்டளைப்படி நடக்கும் விழா ஆனது.
“மேலோர்க்கு யாத்த கரணம்
கீழோர்க்கு ஆன காலமும் உண்டே…” என்கிறது தொல்காப்பியம்.
கரணம் என்றால் கல்யாணம். அதாவது… மேலோர்களான பிராமணர்கள் வகுத்த கல்யாண கர்மாக்கள்… மற்றவர்களுக்கும் வழக்கத்தில் இருந்தது. விளக்கம் என்னவென்றால்… தொடர்ந்து 10 நாள்கள் வரை நடக்கும் கல்யாணச் சடங்குகளை பிராமணர்கள், தங்களால் சூத்திரர்கள் என அழைக்கப்பட்ட தமிழர்களுக்கும் பண்ணி வைத்தனர்.
மந்த்ர பூர்வமான கல்யாணத்தில் இடமில்லை. ஆனால், தமிழர்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும்போது… அவர்களின் வழக்கத்துக்கு விரோதமாக செயல்பட இயலாதென்பதால் தாலியை… பனை ஓலை கயிறை – மெல்ல மந்த்ர மஞ்சளில் இழைத்து மாங்கல்யமாக்கி விட்டார்கள், தங்களுக்கும் சேர்த்து.
மேற்கூறிய… தொல்காப்பிய வாசகத்தில் கவனிக்கவேண்டிய பதம் ஒன்று உண்டு. “மேலோர்க்கு யாத்த கரணம் கீழோர்க்கு ஆன காலம் உண்டே.”
என்பதில் கீழோர்க்கு ஆன காலம் உண்டே என்பதை மட்டும் உற்றுப் பாருங்கள். `பிற்பாடு – இந்த கல்யாண முறையில் மாற்றம் வந்துவிட்டது ஒன்றாக இருந்த காலம் உண்டு’ என்று தெரிய வரும்.
ஏன் மாறிப் போனது? முதல் காரணம் தனக்கும் கீழானவர்கள் அதாவது சூத்திரர்களின் கல்யாணச் சடங்குகளும் ஒன்றாக இருக்கலாமா? அவர்களுக்கும் நாமே கல்யாணம் செய்து வைப்போம். அதனால் சடங்குகளில் சிற்சில மாற்றங்களைக் கொண்டு வருவோம் என நினைத்தார்கள் பிராமணர்கள்.
இரண்டாவது காரணம்… இவ்வளவு நீண்ட சடங்குகளை நடத்தி திருமண விழாவை பத்து நாள்கள் நகர்த்திச் செல்ல தமிழர்களுக்கு பொறுமையோ அல்லது விருப்பமோ இல்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் கன்னியை தூக்கிக் கொண்டோடி சுகித்து திடீர் திருமணங்களை நடத்திக்கொண்ட `களவியல்’ மரபுக்காரர்களாயிற்றே.
அவனது கண்களும், அவளது கண்களும் சந்தித்துக்கொண்ட சிற்சில நொடிகளில்… மவுனப் புன்னகையே மந்திரமாக… கற்பியல் முறையில் காதல் மணம் கண்டவர்களாயிற்றே.
அதனால் தமிழர்களுக்கு அந்த நீண்ட நெடிய சடங்குகளில் பிடிப்பு வரவில்லை. கல்யாண கலாச்சாரங்களுக் கிடையில் `விவாகரத்து’ ஏற்பட்டுவிட்டது.
இத்தகைய காரணங்களால்… சூத்திரர்களை தனியாகப் பிரித்து வைத்த பிராமணர்கள் கல்யாண முறை மட்டுமல்லாது அனைத்து வகையிலும் சூத்திரர்களை கீழ்ப்படுத்தினார்கள். இப்படி செய்வதற்கு… அவர்கள் கையில் கசங்காமல் இருந்த `மனு ஸ்மிருதி’ தான் ரொம்ப உதவியாக இருந்தது.
மனுமூலம் சூத்திரர்களை கெடுபிடி செய்த பிராமணர்கள்… இந்தக் கொடுமைக்கும் அதிகமான கொடுமைகளை இன்னொரு பிரிவினருக்குச் செய்தார்கள்.
யாருக்கு க்ஷத்திரியர்களுக்கா…? வைஸியர்களுக்கா…? இல்லை, இல்லை சண்டாளர்களுக்கு.
சண்டாளர்களா? யாரவர்கள்?
மனு கூற்றுப்படி `சண்டாளர்கள்’ யார் என்பதை என் எழுத்தில் என்னால் கூற முடியவில்லை. என்னிடம் மகாத்மா காந்தி கூறியதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.

பகுதி – 9
யார் அந்த சண்டாளர்கள்
துரோகம் செய்தவனை கொலை பாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனைதான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம்.
ஆனால், மநு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்கு கீழ்பட்டவர்கள். எல்லா விதத்திலும் ஒடுக்கப்பட வேண்டியவர்கள். வர்ணாஸ்ரம பேதத்தின் கடைசி கூட்டத்தினர் இப்படியாக அருவருப்புடன் வர்ணிக்கப்படும் தலித்துகளைத்தான் மநு தனது அகராதியில் பஞ்சமர்கள் என்று சண்டாளர்கள் என்றும் குறிப்பிட்டார்.
ஏன் அவர்களைச் சண்டாளர்கள் என குறிப்பிடவேண்டும்? அவர்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்?
இதற்கான பதிலைத்தான் தானே எழுதிட முன் வரவில்லை. அண்ணல் காந்தியடிகள் எனக்கு உரைத்த பதிலை அப்படியே உங்களுக்குத் தருகிறேன் என குறிப்பிட்டேன்.
முதலில் காந்தியாரை நான் சந்தித்த சந்தர்ப்பம் பற்றி விரிவாகச் சொல்லுகிறேன்.
இந்திய நேரத்தின் விடுதலைக்கு முந்தைய காலம். சுதந்திர போராட்டத்தை விடவும் காந்தியடிகள் சமூக சீர்திருத்த போராட்டத்தில்தான் அதிகம் ஈ டுபட்டிருந்தார். அந்த வகையில் எங்கள் ஊரான கும்பகோணத்திற்கு தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்துக்காக காந்தி பலதடவை வந்தார்.
அப்படி ஒரு தடவை வந்தபோது ஊரிலுள்ள நான் உட்பட சில பிராமண இளைஞர்கள் ஒன்று கூடினோம். காந்தி சனாதன தர்மத்தை சாய்க்க வருகிறார். அவரை நாம் எதிர்க்கவேண்டும். அவரது பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும் என திட்டம் தீட்டப்பட்டது.
உடனடியாக அந்த கூட்டத்தின் தீர்மானங்கள் செயலாக்க வடிவம் பெறத் தொடங்கின. அதில் முதல் திட்டம்தான் முதன்மையான . காந்தியடிகளுக்கு கருப்புக் கொடி காட்டுவது தான்.
திட்டப்படி காந்தியடிகள் கும்பகோணம் நகருக்கு வந்தபோது, நானும் சில சனாதன இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கருப்புக்கொடிகளைப் பிடித்துக்கொண்டோம்.
தீண்டாமை ஒழிப்பில் ஈ டுபடும் காந்தியாரே திரும்பிப் போங்கள். சனாதன வர்ணாஸ்ரமத்தை எதிர்க்காதீர்கள் என்று நாங்கள் பல முழக்கங்களை போட்டோம்.
காந்தி மேடைக்கு வந்துவிட்டார். அவரது பேச்சைக் கேட்க நிறைய பேர் கூடியிருக்கிறார்கள். நாங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக முழக்கங்களை எழுப்பி கருப்புக் கொடிகளை உயர்த்திக் காட்டினோம்.
அப்போதைய கும்பகோணம் காங்கிரஸ் தலைவர் பந்தலு அய்யர்என நினைக்கின்றேன். காந்தி பந்துலு அய்யரை தன் அருகே அழைத்தார். என்ன விவகாரம்? என கேட்டார். அய்யரும் எங்களின் எதிர்ப்புணர்வை சுட்டிக்காட்டி, ‘உங்களை தீண்டாமைக்கு எதிராக பேச வேண்டாம் என்கிறார்கள். கொஞ்ச நேரம் போராடிவிட்டு போய்விடுவார்கள். நீங்கள் பேசுங்கள் என காந்தியடிகளிடம் தெரிவித்தார். ஆனால், காந்தி அவ்வாறு எங்களை அலட்சியப் படுத்தவில்லை.
எங்களை நோக்கி கையசைத்து கூப்பிட்டார். போனோம். முன்வரிசையில் நான்தான் இருந்தேன் Why are you demonitpte young men? என கேட்டார்
நாங்கள் போராட்டம் பற்றி சொன்னோம். அதற்குப் பிறகு காந்தி முதலில் எங்களிடம் பதிலளிக்க ஆரம்பித்தார்.
நான் தீண்டாமை முற்றாகவேண்டாம் என்கிறேன். பஞ்சமர்கள் என பட்டம் கட்டி அவர்களை கொடுமைபடுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு. அவர்களை தீண்டத் தகாதவர்கள் என ஒதுக்கிவைக்காதீர்கள். அவர்களையும் பொது இடங்களில் அனுமதியுங்கள். கோயில்களில் நுழைய விடுங்கள் என பிரச்சாரம் செய்யவந்தேன்.
இதையெல்லாம் வர்ணாஸ்ரமம் பேசும் நீங்கள் எதிர்க்கிறீர்கள். நீங்கள் மநு ஸ்மிருதி படித்துள்ளீர்களா? மநுவில் பஞ்சமர்களை சண்டாளர்கள் என அபாண்ட வார்த்தையால் குறிப்பிட்டுள்ளார்கள். ஏன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அந்த காலத்தில் பிராமணர்கள் சூத்திரர்களை தங்களது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதாவது, தாங்கள் இட்ட கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்து முடிக்கக்கூடிய அளவுக்கு சூத்திரர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். இத்தகைய காலகட்டத்தில் பிராமண சமூகத்துப் பெண்கள் சிலருக்கு சூத்திரர்கள் மீது பரிதாபம் , அனுதாபம் ஏன் ப்ரியம் ஏற்பட்டது.
தனது வீட்டிலுள்ள பிராணர்களுக்கு தெரியாமல் அப்பெண்கள் சூத்திரர்களுடன் நட்பு பாராட்டினார்கள். உறவு கொண்டாடினார்கள். ஏன்? கல்யாணம் கூட பண்ணிக் கொண்டார்கள். சூத்திரர்களை கடுமையாக நடத்திவந்த பிராமணர்கள் தங்கள் வீட்டு பெண்களில் சிலரே அவர்களுடன் வாழ்க்கை அமைத்துக்கொண்டதை பெரும் அவமானமாக கருதினார்கள். பிராமண ஸ்திரீகளுக்கும் சூத்திர ஆண்களுக்கும் பிறந்த சந்ததியை அதனால்தான் சண்டாளர்கள் என பெயரிட்டு ஒதுக்கிவைத்தனர்.
நாளடைவில் பிராமண ஆண்கள் சூத்திர பெண்களை கள்ளத்தனமாக உறவு கொண்டனர். இவர்களுக்கு பிறந்த சந்ததியினருக்கும் அதே சண்டாளர்கள் என்றுதான் பெயர். அதனால்தான் சண்டாளர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து நீ என் கண்ணில்பட்டாலே தீட்டு, அபச்சாரம் என புறந்தள்ளி வைத்தார்கள் பிராமணர்கள். நான் சொல்வது வெகு காலம் முன்பு.
இப்படி வளர்ந்த சந்ததியைத்தான் இப்போது நீங்கள் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்கிறீர்கள் அவர்களின் தாயார் தகப்பனார் யார் என எண்ணிப் பாருங்கள். இதெல்லாம் புஸ்தகத்தில்தான் இருக்கிறது. நானாக சொல்லவில்லை என எங்களிடம் ஆங்கிலத்தில் சரசரவென பேசிமுடித்தார் காந்தியடிகள்.
முன்வரிசையில் இருந்த நான் திரும்பிக்கொண்டேன்.

பகுதி – 10
என்ன?… அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால் யார் என சொன்னதை போன அத்தியாயத்தில் கேட்டீர்களா?
நீங்கள் இப்போது கேட்டதை நான் பற்பல வருடங்களுக்கு முன்னால் காந்தி வாயால் கேட்டு லேசாக அதிர்ந்தேன்.
பிறகு… நான் மநுவுக்குள் மூழ்க ஆரம்பித்தேன். ‘சண்டாளர்கள்’ என குறிப்பிட்ட மநு அவர்களைப் பற்றி மேலும் என்ன சொல்லியிருக்கிறது என்பதுதான் தேடல்.
பிராமண வீட்டுப் பெண்கள் சூத்திரர்களோடு ப்பிரியப்பட்டார்கள் அல்லவா?… அதே காரணத்துக்காக அவர்கள் சமூகத்திலிருந்து தனியே பிரிக்கப்பட்டார்கள்.
சமூகம்?…
ஆமாம்… தொழில் முறையில் பிரிவு பிரிவுகளாக வாழ்ந்த மக்களை பிராமணர்கள் பார்த்தார்கள். ‘நாளைய சந்ததியில் இவர்கள் தொழில் மாறிவிட்டால் என்ன சொல்லி அழைப்பது’-சிந்தித்தார்கள். a stable society அதாவது நிலையான சமூகக் கட்டுமான அமைப்பு வேண்டுமென்றால் அது சாதியாக பிரிக்கப்பட்டால்தான் உறுதியுடன் இருக்கும் என்பது பிராமணர்களின் கணிப்பு. அதற்காக?
பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள். சூத்திரனுக்கு பிறந்தவன் நாளை தொழில் மாறினாலும் சூத்திரன்தான். வைசியனுக்கு பிறந்தவன் பிறகு வணிகத்தை மறந்தாலும் அவன் வைசியன்தான். க்ஷத்திரியனுக்கு பிறந்தவன் பின்னாளில் ராஜ்யமின்றி நடுத்தெருவில் நின்றாலும் அவன் க்ஷத்திரியன்தான்.
இதுதான் அவர்கள் வகுத்த stable society. மறுபடியும் மநுவுக்குள் செல்வோம்.
சாதிவிட்டு சாதி மாறிய காதல்கள் பிராமணஸ்திரிகளுக்கும், சூத்ர புத்ரர்களுக்கும் மட்டுமல்ல
க்ஷத்திரிய ஸ்த்ரிகள்-சூத்ர புத்ரர்கள்
வைசிய ஸ்திரிகள்-சூத்ர புத்ரர்கள்
மேலும்…
சூத்ர ஸ்திரிகள்-பிராமண, க்ஷத்திரிய, வைஸிய புத்ரர்கள்.
இப்படி காதல்தேவன் கட்டுகளை உடைத்து கல்யாணங்களை கள்ளத்தனமாக பண்ணிக் கொண்டிருந்தான்.
காதல் தேவனும், காமதேனும் கூட்டணி வைத்துஇஷ்டத்துக்கு திருவிளையாடல் நடத்திக் கொண்டிருந்தால் மநு நினைத்த stable society அமையுமா? அமையாதே.
இதுவும் தெரிந்திருந்தது மநுவுக்கு. அதனால்தான் இந்த பிரச்சினைக்காக மாற்றுச் சட்டமும் இயற்றியிருக்கிறார்.
என்ன மாற்றுச் சட்டம்?
முறைகேடான சாஸ்திரங்களை சாகடிக்கக்கூடிய வகையில் இதுபோல கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு இரண்டு அளவுகோல் வைத்துப் பார்த்தார். மநு ஒன்று.. அனுலோம சங்கரம்… இரண்டு… ப்ரதிலோம சங்கரம் அனுலோம… பிரதிலோம என்றால் என்ன என தெரிந்து கொள்வதற்கு முன் ‘சங்கரம்’ என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
முறைகேடான.. சபிக்கப் படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் ‘சங்கரம்’ என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
முறைகேடான… சபிக்கப்படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் ‘சங்கரம்’.
சரி அனுலோம சங்கரம் என்றால்? இந்த உறவில்.. ஆண் மேல்ஜாதிக்காரனாக இருந்தால், இதற்கு பெயர் அனுலோம சங்கரம்.
ஆனால், இவர்களை மநு சண்டாளர்களாக பார்ப்பதில்லை. ஏனென்றால் மேல் ஜாதி ஆண் அல்லவா? கீழ் ஜாதிப்பெண்ணை எடுத்துக் கொண்டிருக்கிறான்.
நம் இனத்து ஆண்… பிற இன பெண்களை பார்ப்பது, பறிப்பது, நுகர்வது, உறவுகள், உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் பொதுவாய் ‘சங்கரம்’.
இக்கட்டுரையின் முற்பகுதியிலேயே சொன்னது போல எல்லா ஜாதிக் காரர்களுக்கும் அந்த ப்ரியம் பொதுவானதாக இருந்தது.
இந்த சம்மந்தத்தில் ஆண் மேல்ஜாதிக் காரனாகவும் பெண் கீழ்ஜாதிக்காரியாகவும் இருந்தால் இதற்கு பெயர் அனுலோம ‘சங்கரம்’.
உலகத்துக்கே அமைதியைத் தருவது பெண்களின் அழகுதான்… என்றது வேதம். மநுவோ… கீழ்ஜாதிப் பெண்கள் மேல் ஜாதி ஆண்களைக் கவர்ந்தபோது மட்டும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. என்ன செய்தாலும் அது பாபம் அல்ல என்கிறது மநு.
இவர்களை அடித்துத் துரத்தி கொடுமைகள் செய்யாமல் தங்கள் உடனேயே தங்க வைத்துக் கொள்கிறது மநு சாஸ்திரம்.
அடுத்து சொல்லப்போகும் ‘ப்ரதிலோம சங்கரம்’ பற்றி நீங்கள் யூகித்திருக்கலாம். அதாவது….
மேல்ஜாதிப் பெண்களை கீழ்ஜாதி ஆண்கள் கவர்ந்தது, பறித்து நுகர்ந்து சென்றால் மநுவின் பார்வையில் இது பிரதிலோம சங்கரம்.
அடேய்.. அதெப்படி நம் இனத்து பெண்ணை ஒரு கீழ்சாதிப் பயல் கவர்ந்து செல்லலாம்?… இவளுக்கு எங்கே போயிற்று புத்தி? ஊரைவிட்டே பகிஷ்காரம் பண்ணுங்கள் நாம் வாழும் தெருவில் அவர்களின் பாபத்தடங்கள் படக்கூடாது அவர்களின் சுவாசக்காற்று நமது தெருக்காற்றை உரசக்கூடாது.
அவர்களும், அவர்களைத் தொடர்ந்துவரும் சந்ததிகள் அத்தனைபேரும் சண்டாளர்கள்தான் சட்டம் இயற்றி தண்டனை விதித்தது மநு.
இதன் காரணமாக பிரதிலோம சங்கர கூட்டம் ஊரைவிட்டு விரட்டப்பட்டது. இன்று வரை அவர்கள் ஊரோரம் குடியிருக்கும் காரணம் புரிகிறதா?
ஆனால்… ‘அனுலோம சங்கர’ கூட்டத்துக்கு ஊரிலேயே இடம் கொடுத்து தேர் ஓட்டுங்கள் என ஆணையிட்டது மநு மநுவின் ‘சண்டாளன்’ என்ற பதத்துக்கு… சமஸ்கிருத மொழியியல் பேரறிஞரான பாணினி கூட அர்த்தம் தேடுகிறேன் எனச் சொல்லியிருக்கிறார்.
நாம் மேலும் வரலாற்றைத் தேடுவோம்.


பகுதி - 17:

அப்படியானால் சங்கரர் சகாப்தம் முடியும் வரை சங்கர மடங்கள் தோன்றவில்லையா? அந்த மடங்களையெல்லாம் சங்கரரே ஸ்தாபித்தார் என்ற கருத்து உண்மையில்லையா? அவ்வாறே வைத்துக் கொண்டால் அத்வைத மடங்கள் மலர்ந்த கதை என்ன? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை சங்கரருக்குப் பிறகான நூற்றாண்டு காலம்தான் சொல்கிறது. தான் போதித்த அத்வைத கருத்துக்களை தன் காலத்துக்குப் பின்னாலும், உலகம் முழுவதும் சென்று பரப்புமாறு தன் சிஷ்யர்களுக்கு ஆணையிட்டார் ஆதிசங்கரர். புத்தரிடமிருந்து தனக்கான அத்வைதத்தின் சாரத்தை பெற்ற சங்கரர்... வைஷ்ணவர்களால் ப்ரசன்ன பௌத்தர்' என்றே அழைக்கப்பட்டார். அதாவது புத்தரின் கருத்துக்களை மறைமுகமாக சொன்னவர் என்பதால் இப்பெயரால் அழைக்கப்பட்டார். இதேபோல் ஆதிசங்கரரின் சிஷ்யர்களும் ப்ரஸன்ன பௌத்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.சங்கரரர் காலத்துக்குப் பிறகு... அத்வைதத்தை பரப்ப முழுக்க முழுக்க முனைந்தார்கள் இந்த ப்ரஸன்ன பௌத்தர்கள். சங்கரரை போலவே ஊர் ஊராக சுற்றினார்கள். வாழ்வே பொய் எதையும் நம்பாதே. சந்நியாசம் பெறு...! என சுற்றிச் சுற்றி வலியுறுத்தினார்கள். தனேஷனே பார்யஷனே புத்ரேஷனே என சொல்லித்தான் அவர்கள் சந்நியாசம் ஏற்றார்கள். அதாவது செல்வ ஆசையை துறந்தேன்.மனைவி (பெண்) இச்சையை மறந்தேன். அதன் மூலம் புத்ர விருப்பத்தை மறுத்தேன் என்பதுதான் இந்த மூன்று வார்த்தைகளின் முழக்கம். இந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டு சங்கரரை பரப்புவதற்காக நடந்த சிஷ்யர்கள் அலைந்து அலைந்து ஓர் முடிவுக்கு வந்தார்கள். "நமது குருநாதர் புத்தரிடமிருந்த சர்வம் சூன்யம் என்ற உபதேசத்தைத்தான் கைக்கொண்டு கடவுள் மட்டும் உண்மை மற்ற அனைத்துப் பொய் என சொன்னார். அப்படிப்பட்ட சங்கரரின் புத்தோபதேசத்தை பரப்ப நாமும் புத்தரைப் பின்பற்றியவர்களின் யுக்தியை பின்பற்றலாமே"... என ஆலோசித்தனர்.
என்ன யுக்தி?...
இந்தத் தொடரின் முற்பகுதியில் புத்தரைப் பற்றி எழுதிய அத்தியாயங்களில் நான் ஒன்றை குறிப்பிட்டேனே ஞாபகம் இருக்கிறதா?... "இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே பேசப்படுகின்றதே இது போன்ற மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்துதான் பெற்றார்கள்" என இத்தொடரில் 4-ஆவது அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த புத்த யுக்தியைதான் சங்கரரின் சிஷ்யர்கள் பின்பற்றலாமா என ஆலோசித்தனர். அதன்படியே ஆதிசங்கரரின் சிஷ்யர்கள் புத்தர் விஹார்களை முன்னோடியாக வைத்து மடங்களை நிர்மாணிக்க ஆரம்பித்தனர். ஆதிசங்கரரின் அத்வைத சிஷ்யர்கள் திசைக்கு கொஞ்சம் பேராய் கொத்துக் கொத்தாய் நடந்தனர். தெற்கு திசை நோக்கி நடந்தவர்கள் சிருங்கேரியில் ஒரு மடத்தை எழுப்பி அத்வைத பிரச்சாரத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள். கிழக்குப் பக்கமாக மாயாவாதத்தை பரப்ப சென்றவர்கள் பூரியில் மடத்தை நிர்மாணித்தார்கள். மேற்குப் பக்கமாய் அத்வைதம் பரப்புவதற்காக துவாரகையில் தொடங்கப்பட்டது மடம். வடக்குப் பகுதிக்கும் சென்றனர். பத்ரியில் சங்கரரின் கொள்கைகளை விரிவாக்க ஒரு மடத்தை நிர்மாணித்தனர். இவ்வாறு சங்கரரின் முக்கியமான சிஷ்யர்களான சுரேஷ்வரன், ஆனந்தகிரி, பத்மநாபர், ஹஸ்தமலர் போன்றவர்கள் உள்ளிட்ட பல சிஷ்யர்கள் இந்த 4 மடங்களையும் நிர்மாணிக்கிறார்கள். ஆதிசங்கரரின் உபதேசத்திற்கு இணங்க இம்மடங்களில் எந்தவிதமான பூஜை புனஸ்காரங்களுக்கும் இடம் கிடையாது. அத்வைதம் காட்டும் ஞான மார்க்கத்தின்படி விக்ரக வழிபாடு கிடையாது. பூஜைகள் கிடையாது. கோவில்களுக்கும் மடங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. ஆகமங்கள் கிடையாது. வேதங்கள் சொன்ன கர்மங்கள் கூடாது. சங்கர கொள்கைகளை பரப்புவதற்கான இம்மடங்களில் சமையல் செய்யக்கூடாது. பிச்சை எடுத்து சாப்பிடும் சந்நியாசிகள் தங்கும் இடத்தில் எதற்காக சமையல்? சமையல் இல்லையென்றால் அதாவது நைவேத்யம் இல்லையென்றால் பிறகு அங்கே பூஜை எப்படி நடக்கும்? பூஜை இல்லையென்றால் அங்கே விக்ரகம் எப்படி இருக்கும்?
ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் "Shankara Muths are only for proclamation of Advydam" அதாவது சங்கரரின் சிஷ்யர்களால் நிர்மாணிக்கப்பட்ட மடங்களின் முதல் மற்றும் முழுமையான பணி அத்வைத கொள்கையை பறைசாற்றி உலககெங்கும் பிரச்சாரம் செய்வதற்காகத்தானே மட்டுமன்றி வேறெதற்கும் அல்ல
இப்போது நீங்கள் கேட்கலாம் மடங்களுக்கான நோக்கம் இப்போதும் அதே அளவில் இருக்கிறதா? சங்கரர் மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?

பகுதி - 18:

ஆதிசங்கரர் போதித்தபடிதான் அவர்தம் சிஷ்யர்களால் சிருஷ்டிக்கப்பட்ட மடங்கள் நடக்கின்றதா? ஆதி சங்கரரே மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்? இரண்டாவது கேள்விக்கான பதிலை முதலில் பார்ப்போம். வரலாற்றுச் செய்திகளை, வதந்திகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு அப்படியே அண்ணாந்து பார்த்து ஆமாம் போடுவதல்ல அறிவு. அதிலே சொல்லப்பட்டவற்றின் உள்ளே போய் உட்கார்ந்து சிந்தனை செய்து சரிபார்ப்பதுதான் முறை. அந்த முறையில் சங்கரர், சங்கர மடங்களை ஸ்தாபித்தாரா? என்பதை பார்க்கக் கடவோம். ஆதிசங்கரர் தனது முப்பத்து இரண்டாவது வயதிலேயே மோட்சமடைந்து விட்டார் என கொண்டு பார்த்தால், சாலை வசதிகள் தெளிவான பூகோள வழிகாட்டுதல்கள் என எவ்வித போக்குவரத்து தகவலமைப்பும் துளிகூட இல்லாத சங்கரரது காலத்தில் அவர் இந்தியா முழுமையும் சுற்றியிருக்க முடியுமா? என்பதே சிந்திக்கத் தகுந்ததாகிறது. இன்றுகூட நெடுஞ்சாலைகளிலிருந்து கோபித்துக் கொண்டது போல் எத்தனை சிறு சிறு வீதிகள் விலகிச் செல்கின்றன. அவற்றின் வழியே எத்தனை கிராமங்கள் கல்லும் மண்ணும் கலந்த சந்துகளால் கட்டப்பட்டு கிடக்கின்றன. அந்த சின்னச் சின்ன சாலைகளைக் கடந்து அந்த கிராமத்துக்குள் செல்வதற்கு விஞ்ஞானம் வளர்ந்த இக்காலத்திலேயே நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது? கால விரயம் ஆகிறது? அப்படியென்றால் விஞ்ஞானம் வளராத ஞானம் வளர்ந்த காலத்தில் வாழ்ந்த சங்கரர் தன் காலத்தில் எத்தனை வியாக்யானங்கள் பாஷ்யங்கள் செய்திருக்கிறார். இவ்வளவையும் மூலநூல்கள் பார்த்து படித்து உணர்ந்து தெளிந்து பாஷ்யமாக மாற்றி இயற்றுவதற்கு சங்கரருக்கு குறிப்பிட்ட காலம் நிச்சயமாக பிடித்திருக்கும். இந்த பெருங்காரியத்தோடு ஊரெங்கும் சுற்றி கால் நடையாகவே சுற்றி அத்வைதத்தை பரப்பியும் வந்திருக்கிறார். கால தேவனின் குளிர், வெப்ப ஜாலங்களில் பயணித்து இன்று இந்தியா என்று சொல்கிறோமே இவ்வளவு பெரிய நிலப்பரப்பையும் பரவலாக சுற்றி வந்திருக்க சங்கரருக்கு எவ்வளவு காலம் பிடித்திருக்கும். ஊர் ஊராக போய் உடனே மடம் நிர்மாணிப்பதை சங்கரர் முக்கிய கடமையாக கருதவில்லை. சென்ற உடனேயே அங்கே மடம் ஆரம்பிக்க வேண்டிய அவசியமும் சங்கரருக்கு இருந்திருப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் தெற்கே சிருங்கேரியிலிருந்து வடக்கே பத்ரிநாத் கிழக்கே பூரி, மேற்கே துவாரகா என திக்குக்கு ஒன்றாய் எக்கச்சக்க தொலைவுகளை இவ்வளவு இளவயதில் முக்தியடைந்த சங்கரர் பயணித்து மடங்களை நிர்மாணித்தார் என்பதை காலக்கணக்கு கேள்வி கேட்கிறது. அடுத்ததாக சங்கரர் முக்தியடைந்த அந்த புண்ணிய பூமி எங்கே இருக்கிறதென இதுவரை இறுதியாக தெரிய வரவில்லை. ஒருவேளை சங்கரரே இந்த நான்கு மடங்களையும் தன் ஆயுளுக்குள் ஸ்தாபித்ததாக கருதிக் கொள்வோம். அப்படியானால் சங்கரர் முக்திபெற்ற பிறகு. அவர்மேல் கொண்ட பக்தியின் காரணமாக, மரியாதையின் காரணமாக... அவர் போதனையை கேட்டவர்கள் என்பதன் காரணமாக சிஷ்யர்கள், சங்கரருக்கு அவர் ஸ்தாபித்த ஏதாவது ஒரு மடத்தில் அவருக்கு சமாதி அமைத்திருப்பார்களே அவர் ஸ்தாபித்த மடத்துக்கு இதைவிட வேறென்ன பெருமை கிடைத்திருக்க முடியும்?. சரி சங்கரரே என் இறப்பும் ஒரு பொய்தான். அதனால் என்னை நான் நிர்மாணித்த மடங்களில் ஒன்றில் அடக்கம் செய்து மடத்தின் நோக்கத்தை கெடுத்து விடாதீர்கள் என்று சிஷ்யர்களிடம் சொல்லியதாக வைத்துக் கொள்வோம். அப்படியிருப்பின் சங்கரர் முக்தி பெற்ற ஸ்தலத்திலேயே அவருக்கு ஜீவசமாதி எழுப்பியிருக்க மாட்டார்களா? அதுவும் தேடலில் காணக் கிடைக்கவில்லையே. இந்த கேள்விக் குறிகளையெல்லாம் ஒரு பக்கம் வையுங்கள். இன்னொரு பக்கம் சங்கரர் சங்கர மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு தெய்வங்களே சாட்சி சொல்கின்றன. தெய்வ சாட்சியா? ஆமாம். கடந்த அத்தியாயத்துக்கு, முதல் அத்தியாயத்தில்தான் மோட்சம் பெறுவதற்கு சங்கரர் அருளிய ஸ்லோகத்தை சொல்லியிருந்தேன். அதாவது சந்நியாசிகளின் நற்சம்பந்தம் பெற்று அதன்மூலம் உலகியல் பற்றை ஒழித்து... மோகத்தை துறந்து அதன் அடிப்படையில் சித்தம் சலனம் இன்றி இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று. இதைச் சொன்ன சங்கரர் விக்ரஹ வழிபாட்டை வலியுறுத்திய ஆகமக்காரர்களை கண்டித்த கதையையும் சொல்லியிருந்தேன். அதாவது மனசு சுத்தமானாதான் மோட்சமே தவிர அப்படி, இப்படி, என விக்ரக வழிபாடுகளால் அல்ல என்பது சங்கரோபதேசம். இப்படிப்பட்ட சங்கரர் தான் மடங்களை நிர்மாணித்து அதில் ஆஹம ரீதியான வழிபாடுகளை நடத்தியிருப்பாரா?
அதிலும் 'அகம் ப்ரம்மம்' என்று சொன்ன சங்கரரின் மடங்களில் நிலவும் வழிபாடுகளைக் கவனியுங்கள். தெற்கே உள்ள சிருங்கேரி மடத்தில் சாரதாதேவி வழிபாடு கிழக்கே உள்ள பூரி மடத்தில் க்ருஷ்ண உபாசனை, வடக்கேயுள்ள பத்ரிநாத் மடத்தில் சில வழிபாடு மேற்கே இருக்கிற துவாரகையில் கிருஷ்ண துதி இப்படியாக 4 மடங்களிலும் விக்ரக வழிபாடு மூர்த்தி உபாஸனை. அதுவும் வெவ்வேறு தெய்வ வழிபாடு... சங்கரரே உண்மையில் மடங்களை ஸ்தாபித்திருந்தால் இப்படிப்பட்ட முரண்பாடுகளை முடிச்சு போட்டிருப்பாரா? இதற்கெல்லாம் சிலர் பதில் சொல்லலாம். 'சங்கரர்தான் மடங்களை ஸ்தாபித்தார். அவரது சிஷ்யர்கள் காலத்தில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்' என்று. சபாஷ். இந்த பதில்தான் முதல் கேள்விக்கு பதில். அதாவது சங்கரர் போதித்தபடிதான் மடங்கள் நடக்கின்றதா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் கிடைத்து விட்டதே. அடுத்ததாக 4 மடங்கள் தானா காஞ்சி மடத்தைப் பற்றி சொல்லவே இல்லையே? இந்த கேள்வி காதில் கேட்கிறது எங்களைப் போன்றவர்களுக்கு. அது கும்பகோண மடம்தான்.

பகுதி - 19:

கும்பகோணம் மடமா? காஞ்சி மடமா? இந்தக் கேள்விக்குள் நுழைவதற்கு முன்பு, 500 வருடங்கள் பின்னால் போய் அதோ அந்த சிருங்கேரி மடத்தின் வாசலில் நில்லுங்களேன். இன்றைய பெங்களூரிலிருந்து சில மணித்துளிகள் வாகனப் பயணம். அங்கே ஷிமோகா இயற்கையின் அழகு அமோகமாய் மேற்குத் தொடர்ச்சி மலைமீது ஏறி இறங்கி தவழ்ந்து கொண்டிருக்கிறது. இங்கிருந்து சுமார் 100. கிலோமீட்டர் கடந்து தண்மையான துங்கா நதியின் மத்திய கருநாடகாவிலுள்ள இந்த சிருங்கேரியில் தான் சங்கரத்துவத்தின் தென்பகுதி மடம் எளிமையாக அமைந்திருந்த குடில் போன்ற தோற்றம் கொண்ட இம் மடத்தின் வாசலில் ஆங்காங்கே சில பிராமணர்களின் பேச்சுக்குரல். மடத்துக்கு உள்ளே சந்நியாசிகள் அமர்ந்திருக்க அங்கேயும் சில பிராமணர்கள், பல நாள்கள் வெளியே சுற்றித் திரிந்த அத்வைத சந்யாசிகள் அன்றுதான் மடத்துக்கு வந்திருப்பார்கள் போலும். அதனால்தான் இந்த பக்தி பரபரப்பு.இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்வது விசேஷம். மடத்தை மையமாக வைத்தபடி அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளில்தான் சுற்றித் திரிந்து அத்வைதம் பரப்பவேண்டும். அதேபோல, அதே பகுதிகளில் வாழ்பவர்கள்தான் அம்மடத்துக்குள் வந்து ஸ்வாமிகளிடம் தரிசனமோ, தீட்சையோ பெற்றுக் கொள்ளவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மடத்துக்கும் ஒரு எல்லை வகுக்கப்பட்டிருந்தது. அந்த எல்லையை விட்டு மடாதிபதிகளும் வெளியே போகக்கூடாது. அந்த எல்லையைத் தாண்டிய பக்தர்களும் அம்மடத்துக்கு வரக்கூடாது. இந்த இடத்தில் மடாதிபதி என்றால் யார்? என்ற கேள்வி எழும். மடங்களின் அதிபதி மடாதிபதி. அதிபதி என்றால் மடத்துக்குப் பொறுப்பானவர் அதாவது இருக்கும் சந்யாச சிஷ்யர்களிலேயே சந்யாச காலத்தில் மூத்தவர்கள் மடாதிபதி என அழைக்கப்படுவார். அவருக்கு அடுத்தது சந்யாசகாலம் பெற்றவர். அடுத்த மடாதிபதியாக வருவார். இதுதான் மடாதிபதி என்பதன் பொருள். மாறாக மடத்துக்கு வருவாய் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு நிருவாகம் செய்பவர் அல்ல அதாவது அந்த காலத்திலெல்லாம் சங்கர மடங்களில் நிறைய சிஷ்யர்கள் இருந்திருக்கிறார்கள்.சந்யாசம் வாங்கிக்கொண்டு செயல் பட்டிருக்கிறார்கள். அவர்களில் அதிக அளவு சந்யாச காலம் பெற்றவர் மடாதிபதியாகிறார். அதாவது The Senior Saint becomes seer இந்த சின்ன விளக்கத்துக்குப் பிறகு மறுபடியும் சிருங்கேரி மடத்தின் வாசலுக்கு வந்துவிட்டீர்களா?
அப்படி ஒரு மூத்த சந்யாசி மடாதிபதியாக வீற்றிருந்தார் மடத்தில். அவரைப் பார்த்து தரிசித்து வணங்கி மகிழ்ந்துவிட்டு திருப்திபட்டுக் கொண்டவாறே சில பிராமணர்கள் வெளியே வந்தனர். அப்போது சில யுவஸ்திரீகள் சங்கர மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவதற்காக உள்ளே நுழைய "நில்லுங்கள்" என்றது மடத்துக்காரரின் குரல் நீங்களெல்லாம் உள்ளே வரக்கூடாது. ஸ்வாமிகள் உங்களை பார்க்கமாட்டார். நீங்கள் கொண்டு வருபவற்றை ஸ்வீகரிக்க மாட்டார். போய்விடுங்கள். "ஏன்...?" கையில் பழங்களை வைத்திருந்த பெண்கள் திரும்பக் கேட்டனர். "ஏனென்றால் நீங்களெல்லாம் ஸ்திரீகள். உங்கள் சம்பந்தம் வேண்டாம். உங்களால் உண்டாகும் இன்பங்களெல்லாம் வேண்டாம். புத்ர சுகம் முதலான லவுகீக வஸ்துகளெல்லாம் வேண்டாம் என்றுதானே சந்யாசம் பெற்றிருக்கிறார். பிறகு எப்படி உங்களை நோக்குவார். பிக்க்ஷாந்திக்காக வந்தால் அப்போது இப்பழக்கங்களை இடுங்கள். இப்போது திரும்ப நடங்கள்" என நீண்டதொரு விளக்கம் சொல்லி வைத்தார் மடத்துக்காரர். ஸ்திரீகளை மடத்துக்குள் சேர்க்கக்கூடாது என்பது சங்கர மடங்களில் ஆரம்ப காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கட்டுப்பாட்டு நெறிமுறை. அந்த இளம் பருவத்து ஸ்திரீகள் மடத்தை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்து போனார்கள். இதற்குப் பின்னர் அதே மடத்துக்கு இன்னும் சில பிராமணர்கள் கொத்தாக வந்தனர். அதே ரீதியில் அவர்களும் தடுக்கப்பட்டனர். "ஏனப்பா? நாங்கள் என்ன ஸ்திரீகளா? அத்வைதிகள்தான். அனுமதிக்க வேண்டியது தானே...?"
"இல்லை உங்களுக்கு அனுமதி இல்லை? "அனுமதி இல்லையா? ஏன்?"
இக்கேள்விக்கு அம் மடத்துக்காரர்கள் சொன்ன பதிலுக்குப்பின் ஒரு கதை. மடங்களுக்கென்று ஓர் எல்லை நிருணயிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான் பக்தர்களும் மடாதிபதிகளும் செயல் படுகிறார்கள் என குறிப்பிட்டேன் அல்லவா? அந்த வகையில் சிருங்கேரி மடத்துக்குட்பட்ட எல்லையில் இன்றைய தமிழ்நாடும் அடங்கும். தமிழ்ப் பிரதேசத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான பிராமண குடும்பங்கள் ஷிமோகா மாவட்டத்திலும் மற்ற இடங்களிலும் குடியேறியிருந்தனர். அவர்களில் வேத விற்பன்னர்கள.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக