திங்கள், 2 நவம்பர், 2009

மகாபாரதம் - பாகம் 2

தந்தையை எண்ணி..சிந்தனை வயப்பட்டான் தேவவிரதன்.பின் எப்படியாவது..அந்த பெண்ணை தன் தந்தைக்கு மணமுடிக்க எண்ணினான்.யமுனைக் கரையை நோக்கி விரைந்தான்.

செம்படவ அரசன்...தேவவிரதனை மிக்க மரியாதையுடன் அழைத்துச் சென்றான்.

தேவவிரதன் தான் வந்த நோக்கத்தைச் சொன்னான்..

செம்படவ மன்னனோ..தன் நிபந்தனையை மீண்டும் வலியுறுத்தினான்.'என் மகளுக்குப் பிறக்கும் மகனே...சந்தனுக்குப் பின் அரசுரிமை பெறவேண்டும் ' என்றான்.

உடனே..தேவவிரதன் 'இவளுக்குப் பிறக்கும் மகனே..அரசுரிமை ஏற்பான்.வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை' என்று உறுதியாகக் கூறினான்.'நீங்கள் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும்'என்றான்.

செம்படவ அரசன்..'தேவவிரதனே..அரச குலத்தில் பிறந்தவன்...கூறாததை நீர் கூறினீர்...நீர் சொல்வதை உம்மால் காப்பாற்ற இயலும்..நீங்கள் சத்தியம் தவறாதவர் என்பதில்..எனக்கு துளியும் சந்தேகம்
கிடையாது. ஆனால் உமக்கு உண்டாகும் சந்ததிப் பற்றி..எனக்கு சந்தேகம் உண்டு.நீங்கள் இப்போது தரும் வாக்குறுதியை..உம் சந்ததியினர் மீறலாம் இல்லையா?'என வினவினான்.

உடன் தேவவிரதன் கூறுகிறான்...

'செம்படவ அரசே! எனது சபதத்தை கேளுங்கள்.இங்குள்ள புலனாகாத..பூதங்களும்..பலர் அறிய வீற்றிருப்போரும்..இந்த சபதத்தை கேட்கட்டும்.அரசுரிமையை சற்றுமுன் துறந்து விட்டேன்..சந்ததியையும் துறக்க நான் மேற்கொள்ளும் சபததைக் கேளுங்கள்...இன்று முதல்..பிரமசரிய விரதத்தை மேற்கொள்கிறேன்.நான் பொய் சொன்னதில்லை.என் உயிர் உள்ளவரை..புத்திர உற்பத்தி செய்யேன்.இது சத்தியம்.என் தந்தைக்காக இந்த தியாகம் செய்கிறேன்..இனியாவது சந்தேகம் இல்லாமல்..உம் மகளை என் தந்தைக்கு திருமணம் செய்து கொடுங்கள்'

தேவவிரதனின் இந்த சபதத்தைக் கேட்டு..செயற்கரிய சபதம் செய்த அவன் மன உறுதியை அனைவரும் புகழ்ந்தனர்.அனைவரும் அவரை பீஷ்மர் (யாவரும் அஞ்சத்தக்க சபதம் மேர்கொண்டவர்) எனப்
போற்றினர்.

பெரியோர்கள் ஆசியோடு செம்படவப் பெண் சத்தியவதியை அழைத்துக்கொண்டு சந்தனுவிடம் வந்தார் பீஷ்மர்.அவரின் சபதத்தை கேள்விப்பட்டு சந்தனு வருத்தமுற்றான்.பின் மகனுக்கு ஒரு வரம் அளித்தான் "இம்மண்ணுலகில் எவ்வளவு காலம் நீ உயிருடன் இருக்க விரும்புகிறாயோ அவ்வளவு காலம் வாழ்வாய்..எமன் உன்னை அணுகமாட்டான்" என்றான்.

சத்தியவதி உண்மையில் சேதி நாட்டு அரசனான உபரிசரஸ் என்னும் மன்னனின் மகள்.செம்படவ அரசனால் வளர்க்கப்பட்டவள்.

சந்தனுவிற்கும்,அவளுக்கும் முதலில் சித்திராங்கதன் என்னும் மகன் பிறந்தான்.பின் விசித்திர வீரியன் பிறந்தான்.சந்தனு மரணம் அடைந்ததும் பீஷ்மர் சித்திராங்கதனை அரசனாக்கினார்.ஒருசமயம் அவன் ..கந்தர்வ நாட்டு அரசனுடன் போர் செய்ய நேர்ந்தது.அந்த கந்தர்வ அரசன் பெயரும் சித்திராங்கதன்" உன் பெயரை மாற்றிக்கொள்" என்றான் கந்தர்வ மன்னன்.:இல்லாவிட்டால் போரிட வா" என சவால் விட்டான்.போரில் சந்தனுவின் மகன் மரணம் அடைந்தான்.

பீஷ்மர் அடுத்து..விசித்திர வீரனை அரசனாக்கினார்.அவனுக்கு மணம் முடிக்க எண்ணினார்.அந்த சமயம் காசி நாட்டு மன்னன் அவனது மூன்று மகளுக்கும் சுயம்வரம் நடத்துவது அறிந்து,பீஷ்மர் காசியை அடைந்தார்.

சுயம்வரத்தில் பல அரசர்கள் கூடியிருந்தனர்.அம்பை,அம்பிகை,அம்பாலிகை என்பது அவர்களது பெயர்.பீஷ்மரின் வயது கண்டு அவர்கள் விலகினர்.சில மன்னர்கள் பீஷ்மரை பார்த்து"நரை கூடிய கிழப்பருவத்தில் திருமண ஆசையா...உன் பிரம்மசரிய விரதம் என்னவாயிற்று" என்று சிரித்தனர்.

பீஷ்மர் கடும் கோபம் அடைந்தார்.மூன்று பெண்களையும் பலவந்தமாக..தேரில் ஏற்றிக்கொண்டு வந்தார்.மன்னர்கள் முறையடிக்கப் பார்த்து தோற்றனர்.

ஆயினும்,சௌபல நாட்டு மன்னன் சால்வன்..கடும் போர் செய்து..தோற்று ஓடினான்.

பின்..பீஷ்மர்..மூன்று பெண்களையும்..தன்..மகள் போல..மருமகள்கள் போல அழைத்துக் கொண்டு அஸ்தினாபுரம் வந்தார்.அப்பெண்களை விசித்திர வீரியனுக்கு திருமணம் செய்யும்..முயற்சியில் ஈடுபட்டார்.அப்போது அப்பெண்களில் மூத்தவள் அம்பை..'என் மனம் சௌபல நாட்டு மன்னன் சால்வனிடம் சென்றுவிட்டது.அவனையே மணாளனாக அடைவேன்'என்றாள்.

உடன் பீஷ்மரும்'பெண்ணே! உன் மனம் அவனை நாடினால்..தடையேதும் இல்லை...இப்பொழுதே நீ அவனிடம் செல்லலாம்'என்றார்.

அம்பையும்..சௌபல நாடு நோக்கி சென்றாள்.
#சால்வனை சந்தித்த அம்பை..'மன்னா..நாம் முன்னரே உள்ளத்தால் கலந்துள்ளோம்..இப்போது முறைப்படி மணம் செய்துக்கொள்வோம்' என்றாள்.

அதற்கு சால்வன் 'பெண்ணே..மன்னர் பலர் இருந்த அவையிலிருந்து பலந்தமாக பீஷ்மர் உன்னைக் கவர்ந்து சென்றார்.மற்றவரால் கவரப்பட்டு..பின் அவர் வீட்டிலிருந்து அனுப்பப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மாட்டேன்.நீ திரும்ப செல்' என்றான்.

சால்வனின் இந்த முடிவினால்..என்ன செய்வது என்று அறியாத அம்பை..மீண்டும் அஸ்தினாபுரம் சென்றாள்..பீஷ்மரை நோக்கி..'சுயம்வர மண்டபத்திலிருந்து என்னை கவர்ந்து வந்த நீரே தர்மசாத்திரப் படிஎன்னை மணம் புரிய வேண்டும்' என்றாள்.

ஆனால்..பீஷ்மரோ 'நான் பிரமசரிய விரதம் பூண்டுள்ளேன்' எனக்கூறி மறுத்தார்.

மாறி மாறி கண்ணீருடன்..சால்வனிடமும், பீஷ்மரிடமும் முறையிட்டபடியே ஆறு வருடங்களைக் கழித்தாள் அம்பை.பின் இமயமலை சாரலை அடைந்து, அங்குள்ள பாகூத நதிக்கரையில்..கட்டை விரலை ஊன்றி நின்று..கடுந் தவம் செய்தாள் பன்னிரெண்டு ஆண்டுகள்.

முருகப்பெருமான்..அவளுக்குக் காட்சி அளித்து..அழகிய மாலை ஒன்றை கொடுத்து..'இனி உன் துன்பம் தொலையும்.அழகிய இந்த தாமரை மாலையை அணிபவனால்..பீஷ்மர் மரணமடைவார்' என்று கூறி மறைந்தார்.

பின் அம்பை..பல அரசர்களிடம் சென்று 'இந்த மாலை அணிபவர் பீஷ்மரைக் கொல்லும் வல்லமை பெறுவார்..யார் பீஷ்மரைக் கொல்கிறார்களோ..அவருக்கு நான் மனைவி ஆவேன்..யாராவது இம்மாலையை வாங்கிக் கொள்ளுங்கள்' என வேண்டினாள்.

பீஷ்மரின் பேராற்றலுக்கு பயந்து யாரும் முன் வரா நிலையில்...ஆண்டுகள் பல கடந்தன.ஆனாலும் அம்பை தன் முயற்சியைக் கைவிடவில்லை.பாஞ்சால அரசன் துருபதனை சந்தித்து'துயரக்கடலில் மூழ்கி யுள்ள..என்னை கை தூக்கி விடுங்கள்' என்றாள்.

அவனும்..பீஷ்மருடன் போராடும் ஆற்றல் எனக்கில்லை' என்று ஒதுங்கினான்.இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில்..அம்மாலையை அம்மன்னனின் மாளிகையில் போட்டுவிட்டு..'பெண்ணே!மாலை எடுத்துச் செல்' என்று கூறிய மன்னனின் வார்த்தைகளையும் புறக்கணித்து வெளியேறினாள் அம்பை.

துருபதனும்..அம்மாலையை காத்து வந்தான்.அம்பை பின் ஒரு காட்டிற்குச் சென்று..அங்கு தவமிருந்த ஒரு முனிவரை சந்தித்தாள்.அவர்..அவளை பரசுராமரைப் பார்க்கச் சொன்னார்.

அம்பையும்..பரசுராமரை சந்தித்து..தன் நிலமையை சொன்னாள்.பரசுராமர் பீஷ்மரை சந்தித்து..அம்பையை மணக்கச்சொல்ல பீஷ்மர் இணங்கவில்லை.ஆகவே இருவருக்குள் போர் மூண்டது.

இருவரும் வல்லமை மிக்கவர்கள் ஆனதால்..யார் வெற்றிப் பெறுவார்..எனக் கூற இயலாத நிலையில்..பரசுராமர் விலகிச் சென்றார்.

மீண்டும்..தோல்வியுற்ற.அம்பை..சிவனை நோக்கி தவமிருந்தாள்.சிவன் அவளுக்கு காட்சி அளித்து'பெண்ணே! உன் கோரிக்கை இப்பிறவியில் நிறைவேறாது.அடுத்த பிறவியில் அது நடக்கும்..உன்னைக் காரணமாகக் கொண்டு பீஷ்மருக்கு மரணம் எற்படும்'என்றார்.

மறுபிறவி எடுக்க நினைத்த அம்பை உடனே தீயில் விழுந்து மாண்டு போனாள்.துருபதனின் மகளாக பிறந்தாள்.சிகண்டி என்ற பெயர் தாங்கினாள்..ஒருநாள் அரண்மணை வாயிலில் மாட்டப்பட்டிருந்த ..அந்த அழகிய தாமரை மாலையைக் கண்டு..அதை எடுத்து அணிந்துக் கொண்டாள்.இதை அறிந்த துருபதன்..பீஷ்மருக்கு பயந்து..தன் மகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பினான்.

பின் சிகண்டி தவ வாழ்க்கை மேற்கொண்டாள்.இஷிகர் என்னும் முனிவருக்கு பணிவிடை செய்யும் போது அம்முனிவர்..'கங்கை ஆற்றின் உற்பத்தி இடத்தில்..விபஜனம்..என்னும் விழா நடை பெறப்போகிறது..அதற்கு வரும் தும்புரு என்னும் மன்னனுக்கு பணிவிடை செய்தால்..உன் எண்ணம் ஈடேறும்'என்றார்.

சிகண்டி அங்குப் போனாள்.அங்கு பல கந்தர்வர்கள் இருந்தனர்.அவர்களில் ஒருவன் சிகண்டியைப்பார்த்து 'நாம் இருவரும் உருவத்தை மாற்றிக்கொள்ளலாமா? அதாவது..உன் பெண் வடிவத்தை எனக்குத் தா..நான் என் ஆண் வடிவத்தை உனக்குத் தருகிறேன்' என்றான்.

சிகண்டியும்..அதற்கு சம்மதித்து ஆணாக மாறினாள்.

பின் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு..நிகரற்ற வீரனாக திகழ்ந்தாள். பாஞ்சாலத்திற்கு திரும்பச் சென்று..தந்தை..துருபதனை சந்தித்து..நடந்த விஷயங்களைக் கூறி.'இனி பீஷ்மருக்கு பயப்பட வேண்டாம்'என்றாள்.

துருபதனும்..மகிழ்ந்து அவனை(ளை) ஏற்றுக்கொண்டான்.
#அம்பை வெளியேறியபின் பீஷ்மர்..விசித்திர வீரியனுக்கு..அம்பிகை,அம்பாலிகையை மணம் செய்வித்தார்.இவர்களுடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்த விசித்திர வீரியன்..காச நோயால் இறந்தான்.

நாட்கள் சில சென்றதும்..சத்யவதி..பீஷ்மரிடம் 'மகனே! உன் தம்பி மக்கள் பேறின்றி இறந்தான்.சந்தனுவின் குலம் தழைக்க வேண்டும்.தருமசாத்திரம் தெரிந்தவன் நீ...புத்திரர் இல்லா குலம் எப்படி தழைக்கும்..ஆகவே..நீ அம்பிகை..அம்பாலிகையுடன் கூடிப் புத்திர சந்ததியை உண்டாக்கு..' என்றாள்.

ஆனால்..பீஷ்மரோ..'அன்னையே! நீங்கள் உரைத்தது..மேலான தர்மமே...ஆனாலும் என் சபதத்தை நான் மீறமாட்டேன்..'என உறுதியாக உரைத்தார்.

அதற்கு சத்யவதி..'ஆபத்துக் காலங்களில்..சாத்திரம் பார்க்க வேண்டியதில்லை..நெருக்கடியான நேரங்களில் ..தர்மத்தில் இருந்து..விலகுதல் பாவம் இல்லை.ஆகவே நான் சொல்வது போல செய்..' என்றாள்.

ஆனால் பீஷ்மரோ..'அன்னையே..நம் குலம் தழைக்க ..வேறு ஏதேனும் யோசியுங்கள்..'என்றார்.பின் சத்யவதி பீஷ்மரிடம்..தன் கதையைக் கூறலானாள்...

'கங்கை மைந்தனே! இன்று ஒரு உண்மையை உன்னிடம் தெரிவிக்கிறேன்.அது ரகசியமாகவே இருக்கட்டும். முன்பு வசு என்ற மன்னனின் வீரியத்தை.ஒரு மீன் தன் வயிற்றில்..கர்ப்பமாக தாங்கியிருந்தது.அந்த மீன் வயிற்றில் வளர்ந்தவள் நான்தான்.ஒருநாள் ஒரு செம்படவன்..அம்மீனை தன் வீட்டிற்கு கொண்டுபோனான்.அங்கு நான் பிறந்தேன்.அவர் பின் என்னை தன் மகளாய் வளர்த்தார்.நானும் வளர்ந்து கன்னிப்பருவம் எய்தினேன்.யமுனை ஆற்றில் பரிசல் ஓட்ட ஆரம்பித்தேன்.

அப்போது ஒரு நாள்..பராசர முனிவர் என் படகில் ஏறினார்.என்னைப் பார்த்து காமவயப் பட்டார்.ஆனால் நானோ பயந்தேன்.அப்போது அவர்..'நான் செம்படவப் பெண் இல்லை என்று உணர்த்தினார்.உடன் நான் இந்த பகல் நேரத்திலா ..என்றேன்.அவர் உடனே சூரியனை மறைத்து இருளாக்கினார்.

என் உடலில் மீன் நாற்றம் வீசுகிறதே..என்றேன்..உடன் என் உடலில் நறுமணம் வீச வைத்தார்.

இந்த நதிக்கரையிலேயே..நீ கர்ப்பம் அடைந்து...குழந்தை பிறந்து மீண்டும் கன்னியாகி விடுவாய்..என்றார்.

பின்..அவர் என்னைச் சேர்ந்து..ஒரு மகனை உண்டாக்கிவிட்டார்.

எனக்குப் பிறந்த அந்த மகன்..'த்வைபாயனன்' என்றழைக்கப்பட்டான்.அவன் யோக சக்தியால்..மகரிஷி ஆனான்.வேதங்களை நான்காக வகுத்தான்..அதனால் வேதவியாசன் என்ற பெயர் பெற்றான்.

நீ சம்மதித்தால்..நான் அவனுக்கு கட்டளை இடுகிறேன்..உடன் அந்த மகரிஷி..இங்கு தோன்றி..அம்பிகை,அம்பாலிகைக்கு புத்திர பாக்கியம் அளிப்பான்.'..என்றாள்.

பீஷ்மரும்..குலத்துக்கு அனுகூலம் என்பதாலும், தர்மசாத்திரத்திற்கு இதனால் கேடில்லை என்பதாலும்..சத்யவதி கூறியதற்கு தடையேதும் சொல்லவில்லை.உடனே சத்யவதி வியாசரை நினைக்க..மகரிஷி தாய் முன்னே தோன்றினார்.

அன்னையே..என்னை அழைத்தது ஏன்? என அவர் வினவ..சத்யவதியும்..'தவத்தோனே..நீ எனக்கு மூத்த மகனாய்..உண்டாக்கப்பட்டிருக்கிறாய்...விசித்திர வீரியன்..எனது இளைய மகன்.பீஷ்மரும் உனக்கு அண்ணனாவார்.பீஷ்மர்..குல சந்ததி விருத்திக்கு..அவரது பிரமசரிய விரதத்தால் உதவ முடியாதவராக இருக்கிறார்.ஆகவே நீ என் கோரிக்கையை ஏற்று...உன் இளைய சகோதரனின் மனைவி
யர்தேவமகளிர் போன்றவர்கள்..அவர்களிடம் நீ சந்ததியை உருவாக்க வேண்டும்' என்றாள்.

அதற்கு வியாசர், தாயே!. புத்திரதானத்தை..சாத்திரங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.ஆனால் நான் சந்ததியைத் தர வேண்டுமென்றால்..அம்மகளிர் இருவரும்..என் விகாரத் தோற்றத்தைக் கண்டு..அருவருப்புக் கொள்ளக்கூடாது.என் உடலிலிருந்து வீசும்..துர்நாற்றத்தைப் பொருட்படுத்தக் கூடாது.அப்படி அம்பிகை என்னுடன் கூடுவாளாயின்..அவளுக்குப் பிறக்கும் மகன்..நூறு மகன்களைப் பெறுவான்' என்று கூறினார்.

சத்யவதி...அம்பிகையை அழைத்து 'நீ ஒரு மகானுடன் கூடிப் புத்திரனைப் பெற வேண்டும்..இது அரச தர்மம்தான். மறுக்காதே!"என்றாள்.அம்பிகையும் நாட்டின் நலன் கருதி..இதற்கு சம்மதித்தாள்.

அன்றிரவு...வியாசர் அம்பிகையின் அறையில் நுழைந்தார்...அவரது, செம்பட்டையான சடை முடி,விகாரமான தோற்றம்..நாற்றம்..எல்லாம் பார்த்து..அம்பிகை கண்களை மூடிக்கொண்டாள்.அச்சம் காரணமாக கண்களைத் திறக்கவே இல்லை.வியாசர் அம்பிகையுடன் கலந்தார்.

பின் தாயிடம் வந்தவர் 'தாயே! வீரமிக்க மகன் பிறப்பான்..ஆனால்..அம்பிகை கண்களை மூடிக்கொண்டிருந்த படியால்..பிறக்கும் மகன் குருடனாய் இருப்பான்' என்றார்.

மகனே, குரு வம்சத்தில்..குருடனாக இருப்பவன்..அரசாள தகுதியற்றவன்.அதனால்..சிறந்த மகனை அம்பாலிகையுடன் கூடி பெற்றுத்தர வேண்டும் என்றாள்..சத்யவதி.
வியாசர் கூறியபடி..அம்பிகைக்கு ஒரு குருட்டுக் குழந்தை பிறந்தது..அதுவே..'திருதிராட்டினன்'.

பின்..வியாசரை அழைத்தாள் சத்யவதி.வியாசரும் அம்பாலிகையுடன் சேர்ந்தார்.ஆனால் அம்பாலிகை..வியாசரின் கோரத்தோற்றம் கண்டு..பயந்து..உடல் வெளுத்தாள்.உடன் வியாசர்.'.உனக்குப் பிறக்கும் மகனும் வெண்மை நிறத்துடன் இருப்பான்.பாண்டு அவன் பெயர்..அவனுக்கு 5 பிள்ளைகள் பிறப்பர்' என்றார்.அம்பிகையும் அதுபோல மகனை பெற்றெடுத்தாள்.

இரு குழந்தைகளும்..குறைபாடுடன் இருந்ததால்..'அம்பிகைக்கு..இன்னொரு மகனைத் தர வேண்டும்' என சத்யவதி வேண்டினாள்.

ஆனால்..அம்பிகை அவருடன் மீண்டும் சேர மனமில்லாது..ஒரு பணிப்பெண்ணை அனுப்பினாள்.பணிப்பெண்ணும்..வியாசரும்..மன மகிழ்சியுடன் கூடினர். பின் வியாசர்..'பணிப்பெண்ணின் அடிமைத் தன்மை நீங்கியது என்றும்..அவளுக்கு பிறக்கும் குழந்தை..சிறந்த ஞானியாய் விளங்குவான் என்றும் கூறி..அவன் பெயர் விதுரன் என்று சொல்லி மறைந்தார்.

வியாசர் மூலமாக..அம்பிகை,அம்பாலிகை,பணிப்பெண் ஆகியோருக்கு.. திருதிராட்டினன், பாண்டு, விதுரன் ஆகியோர் பிறந்தனர்.
#திருதராட்டிரன், பாண்டு, விதுரர் மூவரையும்.. பீஷ்மர் தந்தை போல் இருந்து கவனித்துக் கொண்டார்.போர் பயிற்சிகளையும்,சாத்திரக் கல்வியையும் அளித்தார்.அரசு காரியங்களை பீஷ்மரே கவனித்துக் கொண்டதால்..நாட்டில் நல்லாட்சியும், அமைதியும் நிலவியது.

மைந்தர்கள் மூவரும்..மணப்பருவம் அடைய... பீஷ்மர் திருதராட்டினனுக்கு காந்நார நாட்டு மன்னன் சுபவனுடைய மகளான காந்தாரியை மணமுடித்தார்.கணவன் குருடனாக இருந்ததால், காந்தாரியும்...வாழ்நாள் முழுவதும்..கண்களை துணியால் கட்டிக்கொண்டு தானும் குருடு போலவே இருந்தாள்.(காந்தாரியின் இவ்விரதம்...பீஷ்மரின் விரதம் போன்றது).காந்தாரியின் பத்து சகோதரிகளும் திருதராட்டிரனை மணந்துக் கொண்டனர்.கௌரவ வம்ச அழிவுக்குக் காரணமான சகுனி..காந்தாரியின் சகோதரன் ஆவான்.

யது வம்சத்தில் சூரசேனன் என்னும் மன்னன் இருந்தான்..அவனுக்கு பிரிதா..என்ற மகளும், வசுதேவன் என்னும் மகனும் பிறந்தனர்.(இந்த வசுதேவனே...கிருஷ்ணனின் தந்தை ஆகும்)சூரசேனன் தன் மகளை குந்திராஜனுக்கு..வளர்ப்பு மகனாகக் கொடுத்தான்.இதனால் பிரிதாவிற்கு..குந்தி என்ற பெயர் உண்டானது.ஒரு சமயம்....மகரிஷி துர்வாசருக்கு...குந்தி பணிவிடை செய்ய...அதனால் மனம் மகிழ்ந்த ரிஷி..அவளுக்கு ஒரு மந்திரத்தை அருளினார்.அதை உச்சரித்தால்...வேண்டிய தெய்வம் தோன்றி அருள் பாலிக்கும் என்றார்.

மந்திரத்தை சோதிக்க எண்ணிய குந்தி...ஒருநாள் சூரியனை நினைத்து அம்மந்திரத்தை ஓத...சூரியனும் தோன்றி..அவளுக்கு மகப்பேறு அளித்தான்.இந்நிகழ்ச்சிக்குப்பின் அஞ்சி அக்குழந்தையை..ஒரு பெட்டியில் வைத்து கங்கை ஆற்றில் விட்டு விட்டாள் குந்தி.பின் சூரிய பகவான் அருளால் மீண்டும் கன்னியானாள்.இந்த ரகசியம் யாருக்கும் தெரியாது..ஆற்றில் விடப்பட்ட குழந்தையே பின்னர் கர்ணன் என புகழப்பட்டவன்.

கண்பார்வை இல்லாததால்..திருதராட்டிரன்..அரசாளும் தகுதியை இழந்தான்.பின் பீஷ்மர் பாண்டுவை அரியணையில் அமர்த்தி..அவனுக்கு முடி சூட்னார்.திருதிராட்டிரன் பெயரளவில் மன்னனாய் இருந்தான்.பாண்டுவிற்கு...மணம் முடிக்க நினைத்தார் பீஷ்மர்..குந்தியின் சுயம்வரத்தில்..குந்தி பாண்டுவிற்கு மாலை சூட்டினாள்.

சில காலத்திற்குப் பிறகு..மந்திர நாட்டு மன்னன் மகளும், சல்லியனின் தங்கையுமான மாத்ரி என்பவள் பாண்டுவிற்கு இரண்டாம் மனைவி ஆனாள்.

விதுரர்...தேவகன் என்னும் மன்னனின் மகளை மணம் புரிந்தார்.

இவ்வாறு..மூன்று சகோதரர்களுக்கும் திருமணம் நிறைவேறியது.

அரியணை ஏறிய பாண்டு அஸ்தினாபுரத்திற்கு அடங்கா மன்னர்களை அடக்கி..அவர்களை கப்பம் கட்ட வைத்தான்.நாட்டில் நல்லாட்சி செய்தான்.பாண்டுவின் செயல்களை மக்கள் பாராட்ட..பீஷ்மரும் மகிழ்ந்தார்.

ஒருநாள் வேட்டையாட..பாண்டு தன் மனைவியர்.பரிவாரங்களுடன் காட்டிற்கு சென்றான்.அங்கு புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த இரு மான்கள் மீது..சற்றும் யோசனையின்றி அம்பு செலுத்தினான்.ஆண்மானாக இருந்த கிந்தமர் என்னும் முனிவர் பாண்டுவிற்கு 'இல்லற இன்பத்தை விரும்பிப் பாண்டு மனைவியுடன் கூடும் போது இறப்பான்" என சாபமிட்டார்.இதனால்..மகப்பேறு இல்லாமல் போகுமே என பாண்டு கவலையுற்றான்.

மன்னனின் கலக்கம் கண்ட குந்தி..தனது இளமைப்பருவத்தில்..துர்வாசர் அருளிய மந்திரத்தைப் பற்றிக் குறிப்பிட்டாள்.அதைக் கேட்டு பாண்டு மகிழ்ந்தான்.

பின்..குந்தி, தர்மதேவதையை எண்ணி மந்திரத்தை ஓத..யுதிஷ்டிரனை பெற்றாள்.வாயு பகவான் அருளால் பீமன் பிறந்தான்..தேவேந்திரன் அருளால் அர்ச்சுனன் பிறந்தான்.

பாண்டுவின் விருப்பப்படி..மாத்ரிக்கு மந்திரத்தை உபதேசிக்க..மாத்ரியும் அம்மந்திரத்தை..இரட்டையர்களான அசுவனி தேவர்களை எண்ணி ஜபித்தாள்.அதனால்..நகுலன்,சகாதேவன்..பிறந்தனர்.

ஐந்து அருமைப் புதல்வரை பாண்டு அடைந்தான்.

அஸ்தினாபுரத்தில்..திருதிராட்டினன்..பாண்டு அடைந்த சாபத்தை எண்ணி..அவனுக்கு மகப்பேறு இல்லை..என மகிழ்வுடன் இருந்தான்.நாடாளும் உரிமை..தன் சந்ததிக்கே என்றிருந்தான்.அப்போது பாண்டு மகப்பேறு அடைந்த விஷயத்தை அறிந்தான்.அப்போது காந்தாரியும் கருத்தரித்திருந்தாள்.குந்திக்கு குழந்தைகள் பெற்ற செய்தி அறிந்து..ஆத்திரத்தில் தன் வயிற்றில் அடித்துக் கொண்டாள்.அதன் விளைவாக..மாமிச பிண்டம் வெளிப்பட்டது.வியாசர் அருளால்...அதிலிருந்து நாளொன்றுக்கு ஒருவர் வீதம்..நூறு ஆண் குழந்தைகளும்..ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.இந்த நூற்றொருவரைப் பெற..நூற்றொரு நாட்கள் ஆயிற்று.காட்டில் பீமன் பிறந்த அன்று அஸ்தினாபுரத்தில் துரியோதனன் பிறந்தான்.

துரியோதனன்..பேராசையும்..பிடிவாதமும் உடையவனாக வளர்ந்தான்.அவனை அடுத்து பிறந்த துச்சாதனன்..தீமையில் அண்னனை மிஞ்சினான்.கடைசி தம்பியான விகர்ணன் தவிர அனைவரும் கொடியவர்களே.

காட்டில் வாழ்ந்து வந்த பாண்டவர் ஐவரும்..ரிஷிகளிடம் கல்வி கற்று..அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டனர்.

இந்நிலையில்..ஒரு நாள் காமவயப்பட்டு..பாண்டு மாத்ரியை அணுகிய போது...பண்டைய சாபத்தால்...உயிரிழந்தான்.மாத்ரியும் உடன் அவனுடன் இறந்தால்.குந்தியும்...பாண்டவர்களும்..பீஷ்மரிடம் வந்தனர்.திருதிராட்டினனும்..அன்புள்ளவன் போல நடந்துக் கொண்டான்.சத்யவதியும்,அம்பிகையும்,அம்பாலிகையும் தவத்தை நாடிச் சென்றனர்.

குரு வம்சத்திற்குரிய மன்னனை நியமிக்கும் பொறுப்பு பீஷ்மரிடம் வந்தது.
#ஆரம்பத்தில்..பாண்டவர்கள்,கௌரவர்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருந்தனர்.பலப்பல விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.துரியோதனன் எல்லாவற்றிலும் தானே முதலில் வர வேண்டும் என நினைத்தான்..ஆனால் அர்ச்சுனனும்,பீமனுமே சிறந்து காணப்பட்டனர்.

பீமனது ஆற்றல்..துரியோதனனுக்கு..அச்சத்தையும்..பொறாமையையும் கொடுத்தது.அதுவே..காலப்போக்கில் பாண்டவர் அனைவரையும் வெறுக்கும் நிலைக்கு தள்ளியது.தானே அரசராக வேண்டும்
என துரியோதனன் எண்ணினான்.ஆனால்...யுதிஷ்டிரனே இளவரசுப் பதவிக்கு உரியவன் ஆனான்.மனம் வெதும்பிய துரியோதனன் ..பாண்டவர்களை ஒழிக்க வழி தேடினான்.

ஒரு சமயம்...ஆற்றங்கரையில் அனைவரும் விளையாடிக்கொண்டிருக்கும் போது...பீமனுக்கு விஷம் கலந்த உணவைக் கொடுத்தான் துரியோதனன்.அதனால் மயக்கமுற்றான் பீமன்.துரியோதனன் உடனே அவன் கை..கால்களைக் கட்டி ஆற்றில் எறிந்தான்.விளையாட்டு முடிந்து திரும்பியதில் பீமன் இல்லாது கண்டு குந்தி கவலையுற்றாள்.துரியோதனன் மீது சந்தேகப்பட்டவள்..விதுரரிடம் அதை தெரிவித்தாள்.சந்தேகத்தை வெளிக்காட்டவேண்டாம் என்றும்..தெரிந்தால்..பல இன்னல்கள் விளையும் என விதுரர் எச்சரித்தார்.

ஆற்றில் தூக்கி எறியப்பட்ட பீமன் மீது பல விஷப்பாம்புகள் ஏறி கடித்தன.விஷம்..விஷத்தை முறித்தது.பீமன் எழுந்தான்.பாம்புகளை உதறித் தள்ளினான்.பீமனின் ஆற்றலைக் கண்ட வாசுகி..அவனுக்கு அமிழ்தத்தை அளித்தது.புதுப்பொலிவுடன் பீமன் வீடு திரும்பினான்.

பீஷ்மர் அனைவருக்கும்...விற்பயிற்சி பெற ஏற்பாடு செய்தார். கிருபாசாரியாரும்,துரோணாசாரியாரும்..அப்பொறுப்பை ஏற்றனர்.அனைவரும் வில்வித்தையில் வீரர் ஆயினர்.ஆயினும் அர்ச்சுனன் தலை சிறந்து விளங்கினான்.ஒரு மரம்..அடர்ந்த கிளைகள்..அவற்றின் ஒன்றில் ஒரு குருவி..அதைக் குறி வைத்து அம்பு எய்த வேண்டும்.இச் சோதனையில் சீடர்கள் ..மரம் தெரிகிறது..கிளை தெரிகீறது..இலை தெரிகிறது என்றனர்.ஆனால் அர்ச்சுனன் மட்டும் குருவி தெரிகிறது என்றான்.அதை நோக்கி அம்பெய்தினான்.அர்ச்சுனனின் அறிவுக் கூர்மையை உணர்ந்த ஆசாரியார் அவனுக்கு வில் வித்தையில் எல்லா நுட்பங்களையும் கற்றுத் தந்தார்.

குந்திக்கு சூரியன் அருளால் பிறந்த குழந்தையை பெட்டியில் வைத்து கங்கையில் இட்டாள் அல்லவா? அந்த பெட்டியை..திருதராட்டிரனின் தேர்ப்பாகன் கண்டெடுத்தான்.மகப்பேறற்ற அவன்..அக்குழந்தையை எடுத்து வளர்த்தான்.அவனே கர்ணனாவான்.கௌரவர்,பாண்டவருடன் சேர்ந்து வில்வித்தையைக் கற்றான் கர்ணன்.அர்ச்சுனனுக்கு சமமாக அவன் திகழ்ந்ததால்...துரியோதனனுக்கு அவனிடம் நட்பு ஏற்பட்டது.

ஒரு சமயம் போட்டிகள் நடைப்பெற்றன..போட்டியைக்காண அனைவரும் வந்திருந்தனர்.துரோணரின் கட்டளைப்படி..பீமனும்,துரியோதனனும் கதை யுத்தத்தில் ஈடுபட்டனர்.போட்டி நீண்ட நேரம் நடைப் பெற்ற படியால்..கடைசியில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.விளையாட்டு..வினையாவதை உணர்ந்த துரோணர் போட்டியை நிறுத்தினார்.

அடுத்து..விற்போட்டி.அர்ச்சுனன் தன் திறமையைக் காட்டினான்.உடன் கர்ணன்..அவனை தன்னுடன் போட்டியிட அழைத்தான்.ஆனால்..கிருபாசாரியார்..கர்ணனை அவமானப்படுத்தும் வகையில்..'தேர்ப்பாகன் மகன்..அரசகுமாரனான அர்ச்சுனனுடன் போரிட தகுதியற்றவன்'என்றார்.பிறப்பால் தான் இழிந்தவன் என்ற பேச்ச்க் கேட்டு கர்ணன் நாணி தலை குனிந்தான்.

நண்பனுக்கு..நேர்ந்த அவமானத்தைப் போக்க விரும்பிய துரியோதனன்..அங்கேயே..கர்ணனை அங்க நாட்டுக்கு அதிபதியாக முடிசூட்டினான்.

துரியோதனின் அன்பைக் கண்டு..கர்ணன் மகிழ்ந்தான்.இனி எப்போதும் துரியோதனனை விட்டுப் பிரிவதில்லை என விரதம் மேற்கொண்டான்.கர்ணன் தேரோட்டியின் வளர்ப்பு மகன் என்று அறிந்த
பீமன்..'அர்ச்சுனனுடன் போட்டியிட உனக்கு என்ன தகுதி இருக்கிறது' என ஏசினான்.

உடன் கோபம் அடைந்த துரியோதனன்..பீமனை நோக்கி..'பிறப்புப் பற்றி பேசுகிறாயா? நதிமூலம்,ரிஷிமூலம் பார்க்கக்கூடாது.துரோணர்,கிருபர் ஆகியோர் பிறப்பு பற்றி யாராவது ஆராய்வர்களா? பீமா..உன் தந்தையின் பிறப்பையும்,என் தந்தையின் பிறப்பையும் எண்ணிப்பார்.பிறப்பில் பெருமை இல்லை.செய்யும் தொழிலில் தான் இருக்கிறது.உண்மையில் அர்ச்சுனனிடம் வீரம் இருக்குமேயானால்..கர்ணனிடம் மோதி பார்க்கட்டும்.'என்றான்..ஆனால் போட்டி தொடரவில்லை.

பயிற்சியும்,போட்டியும் முடிந்தபின்..குருவான துரோணருக்கு..அரசகுமாரர்கள் குருதட்சணை தர விரும்பினர்.ஆனால் துரோணர் எதிர்ப்பார்த்த தட்சணை வேறு..பழம் பகை ஒன்றை தீர்த்துக் கொள்ள விரும்பினார்.

அவரது இளமைக்காலத்தில்..அவரது தந்தையான பரத்துவாச முனிவரிடம் பல விதக் கலைகளைக் கற்று வந்தார்.அந்த சமயம்..பாஞ்சால நாட்டு மன்னன் புருஷதனின் மகன் துருபதனும்..பரத்துவாசரி
டம் பயின்று வந்தான்.நாள் ஆக..ஆக..இருவரின் நட்பும் நெருக்கமாக..தான் மன்னனாக ஆனதும் நாட்டில் பாதியை துரோணருக்கு கொடுப்பதாக..துருபதன் வாக்களித்தான்.

பின் துருபதன் மன்னனாக ஆனான்.அந்த சமயம்..துரோணர் வறுமையில் வாடினார்.துருபதனைக் காண அவர் சென்றபோது துருபதன் அவரை அலட்சியப் படுத்தினான்.அரசனுக்கும், ஆண்டிக்கும் நட்பா..என்றான்.துரோணரை அவமானப்படுத்தினான்.துரோணர் அவனை பழிவாங்க காத்திருந்தார்.

இப்போது அதற்கான நேரம் வந்ததாக எண்ணினார்.தன் மாணவர்களை நோக்கி..'பாஞ்சால நாட்டு மன்னனை சிறை எடுத்து..கொண்டு வருக..அதுவே நான் விரும்பும் குருதட்சணை' என்றார்.

துரியோதனன்..படை கொண்டு துருபதனிடம் போரிட்டு தோற்று திரும்பினான்.பின் அர்ச்சுனன் சென்று..அவனை வென்று...சிறைப் படுத்தி...துரோணர் முன் நிறுத்தினான்.

துரோணர்..துருபதனை நோக்கி'செல்வச் செருக்கால் தலை நிமிர்ந்து நின்றாயே..இப்போது உன் நிலையைப் பார்.செல்வம் நில்லாது..என உணர்...ஆணவத்தை விட்டு..அடக்கத்தை கடைப்பிடி.உன் நாட்டின் பாதியை எடுத்துக் கொண்டு..மறு பாதியை உனக்குத் தருகிறேன்..நம் நட்பைத் தொடரலாம்' என்று கூறி அவனை ஆரத் தழுவி..நாட்டுக்கு அனுப்பினார்.

ஆனால்..துருபதன் மனம் மாறவில்லை. துரோணரிடம் முன்னைவிட பல மடங்கு கோபம் கொண்டான்.அவரைக் கொல்ல மாபெரும் வீரனை மகனாகப் பெற வேண்டும் என உறுதி பூண்டான்.பெரும் வேள்வி செய்தான்.அந்த வேள்வியிலிருந்து..அவனுக்கு ஒரு மகனும்..ஒரு மகளும் தோன்றினர்.எதிர்காலத்தில் துரோணரை அழிக்கப் பிறந்த அந்த மகன் பெயர் 'திட்டத்துய்மன்'.மகளின் பெயர்
'திரௌபதி'.

தன் மகளை பார்த்தனுக்கு மணம் முடிக்க சரியான காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தான் துருபதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக