சனி, 31 அக்டோபர், 2009

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்



நீங்கள் எல்லோரும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் கூறிய பொன்மொழிகளில் இருந்து சில உங்களுக்காக.

சத்தியம் என்பது பற்றி பரமஹம்சர் கூறுவதாவது:

* சத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடையமுடியாது.

* உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்கு நாதத்தைக் கிளப்புவதால் ஆவதொன்றுமில்லை.

* உலக வேலைகளைச் செய்துகொண்டிருப்பதற்கிடையிலும் ஒருவன் சத்திய விரதத்தைத் தீவிரமாக அனுஷ்டிக்கவேண்டும். இக்கலியுகத்தில் சத்திய விரதத்துக்கு நிகரான ஆத்மசாதனம் இல்லை. சத்திய விரதம் என்பது சத்தியத்தையே எப்போதும் பேசுதலைக் குறிக்கின்றது. இக்கலியுகத்தில் சத்தியம் பேசுதலே சிறந்ததொரு தவம் ஆகிறது. ஒருவன் சத்தியத்தைக் கொண்டே கடவுளை அடையலாம்.

* எந்தக் காரணத்தை முன்னிட்டும் மனிதன் பொய் பேசலாகாது. பொய் பேசிப் பழகுபவன் படிப்படியாக பாவ காரியங்களைச் செய்யக்கூடிய கீழான மனப்பான்மையைப் பெறுகின்றான்.

* அசுத்தமான மனப்பான்மை உள்ளவர்களுக்கும் ஈசனுடைய அருளுக்கும் வெகுதூரம். எளிமையும் சத்தியமும் உடையவன் ஈசனுடைய அருளை எளிதில் பெறுவான்.

* இறைவனை அடைய முயற்சி செய்யும் ஒருவன் சத்தியத்திலிருந்து சிறிதேனும் பிறழாதிருந்து பழகவேண்டும். சத்தியத்தில் நிலைத்திருப்பவனுக்கு ஈசுவரானுபூதி வாய்க்கிறது.

* முளைத்து வெளியே வந்த யானையின் தந்தம் மறுபடியும் உள்ளே போவதில்லை. ஒருமுறை வெளியே வந்தால் வந்ததுதான். அது போல ஒருவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி வைக்கவேண்டும். கொடுத்த வாக்கிலிருந்து அவன் விலகிச் செல்லலாகாது.

வெள்ளி, 30 அக்டோபர், 2009

ஆண்மீக கட்டுரைகள்-1

ஹிந்துத்துவம் என்பது என்ன?

பதில் : “யாரும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஹிந்துத்துவம். “நீ வேறு, உன்னை அழிப்பதே எனது கடவுள் எனக்கு சொல்லிக் கொடுத்தது” என்று சொன்னால் அந்த கூட்டம் ஹிந்துத்துவத்திற்கு எதிரானது. மனிதநேயத்தின் இன்னொரு பெயர் ஹிந்துத்துவம்.

ஹிந்து மதம் எப்போது தோன்றியது?
பதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.

கடவுள் மேல் பற்றில்லாதவன் ஹிந்துவாக இருக்கமுடியாதா?
பதில் : இருக்கலாம். இந்து மதம் தரும் எல்லையில்லா சுதந்திரத்திற்கு இன்னுமொரு அடையாளம் இது. மற்ற மதங்களில் கடவுள் மற்றும் கடவுளின் தூதராக, மகனாக தங்களை சொல்லி மதத்தை உருவாக்கியவர்களை நம்பாதவர்கள், பற்றாதவர்கள் அந்த மதத்திலிருந்து உடனடியாக வெளியேறிவிடுகிறார்கள். ஆனால், இந்து மதத்தில் அப்படி எந்த தடையும் இல்லை. இயல்பாக இருக்கும் எவரும் இந்துவே.

ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?
பதில் : ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவேண்டும்? எல்லையில்லா இறையை நமது புரிதலுக்கேற்ப புரிந்து கொள்கிறோம். அந்த புரிதல் ஆளுக்காள் மாறுபடும் அல்லவா? எல்லா பாதைகளும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையே வணங்குகிறோம் என்பதே நமது ஹிந்துநெறியின் அடிப்படைக் கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும் கொண்டிருக்கும் அற்புதமான சமுதாயமாகவும் வைத்திருக்கிறது. எப்போதெல்லாம் ஒரே கடவுள் என்ற கருத்து மக்களிடையே பரவுகிறதோ, உடனடியாக அந்த மக்கள் கூட்டம் அசுர சக்தியாக மாறி, மற்றவர்களை அழிக்க துவங்கிவிடுவதை நாம் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.

ஹிந்து என்றால் உண்மையில் என்ன அர்த்தம்?
பதில் : இயல்பானவர்கள் என்றர்த்தம்.

இங்கே பிராமணன்:

பிராமணர்கள் அனைவருமே வெறுக்கத்தக்க பிராணிகள், பச்சை விஷம் கொண்டோர், பரம சண்டாளர்கள் என்ற கருத்திலிருந்து...

'பிராமணர்களை எதிர்க்கவில்லை; பிராமணியத்தை எதிர்க்கிறோம் ' - என்று அந்தக் கருத்தை வளப்படுத்தியவர் அறிஞர் அண்ணா!

ஆகவே, நாமும் 'பிராமணர் ' பற்றி மறுபரிசீலனை செய்ய முன்வர வேண்டும்.

இதைக் கூறுவதற்கு எனக்கு உரிமை உண்டு! 'ஆரிய மாயை ' நூல் எழுதினார் அறிஞர் அண்ணா அவர்கள்! அதே தலைப்பில் 'ஆரிய மாயை ' என்ற நாடகம் எழுதியவன் நான்!

எனது நாடகத்தைப் பார்த்துப் புகழ்கிறபோது பெரியார் அவர்கள் சிதம்பரத்தில் 'அறிஞர் அடியார் ' என்று கூறினார்.

நான் பேசுகிறபோது அந்தப் பட்டத்துக்கு தகுதியற்றவன் என்று பெரியார் முன்னிலையிலேயே கூறினேன்.

ஆரிய மாயை இருந்தது உண்மை! சமுதாய ஏற்றத் தாழ்வு 'ஆழப்பட்டதற்கு ' ஆரியமே முதல் காரணம் என்பதும் உண்மை.

ஆனால் அதெல்லாம் பழைய காலம்; பெரியாரின் கடுமையான உழைப்புக்குப் பின்னர் ஆரியமும் - வர்ணாசிரமத் திமிரும் தவிடு பொடியாகி விட்டன.

'இல்லை; இல்லை! அது இன்னமும் இருக்கிறது என்றால் பெரியார் தொண்டு வீண்; திராவிடர் இயக்கம் - கையாலாகாத இயக்கம் ' என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

நேற்று ஒரு பிராமணன் - மற்றவர்களைப் பார்த்து 'டேய்! இங்கே வாடா! ' என்று அழைத்ததுண்டு.

இன்று பிராமணத் தோழனை நமது பிள்ளைகளே வாடா போடா என்று அழைப்பதைப் பார்க்கிறோம்.

நேற்று புனிதமாகக் கருதப்பட்ட தொழில்களையே பிராமணர்கள் செய்து வந்தார்கள்! இன்று... தோல் பதனிடும் தொழிற்சாலையிலும் அவர்களைக் காணலாம்! 'பாட்டா ஷீ ' கடையில் நமது காலுக்கு செருப்பு மாட்டுகிற தொழிலை 'தொழிலே தெய்வம் ' என நினைத்துச் செய்கிறார்கள்!

பெரியாரின் பணியால் பிராமண சமுதாயம் மேல் தட்டிலிருந்து கீழிறங்கி சமமாக வந்துவிட்டது என்பதை ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும்!

பிராமணர்கள் என்றதுமே பழமைவாதிகள், தமிழருக்கு எதிரானவர்கள்; வீரமற்றவர்கள் என்றெல்லாம் நினைப்பது தவறு!

'கடவுள் இல்லை ' என்று வேத காலத்திலேயே கூறியவர் சார்வாக மகரிஷி.

தென்னாட்டில் நாத்திகம் பேசிய பிராமணப் புலவர் கபிலர்! மறுபிறப்புத் தத்துவத்தைத் தூள் ஆக்கிய 18 சித்தர்களில் சிலர் பிராமணர்கள்!

வேதக் கருத்துக்களை மறுத்த சமணம் புத்தம் போன்ற மதங்களில் முதன்மையான சீடர்களாய் விளங்கியவர்கள் பிராமணர்களே!

கருத்துப் புரட்சிகளை முதலில் வரவேற்று நடந்தவர்களும் பிராமணர்களே!

உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தல், விதவா விவாகம் போன்றவற்றை ஆதரித்துப் போர் நடத்தியவர்களூம் அவர்களே!

வேதத்திற்கு நிகராக தமிழ் மொழியில் 'திராவிட வேதம் ' என்ற திவ்யப் பிரபந்தத்தை உருவாக்கியவர்களும் அவர்களே!

வேதத்தை வெளியே சொல்லக்கூடாது என்ற சட்டத்தை மீறி உடைத்து திருக்கோட்டியூர் மதில் மீதி நின்று வேதகீதம் கிளப்பிய புரட்சிக்காரர் ராமானுஜர்.

நாய்களோடு திரிந்த சண்டாளனைத் தனது குருவாக ஏற்றுக்கொண்ட இன்னொரு புரட்சிக்காரர் ஆதிசங்கரர் என்ற பகவத் பாதாள்.

ஆதிதிராவிடர்களைத் தீண்டக் கூடாது என்றிருந்த காலத்தில் திருப்பாணாழ்வார் என்ற ஆதிதிராவிடரை ஸ்ரீரங்கம் பூசுரர்களின் தோள்மீது ஏற்றி கோவிலுக்குள் கொண்டு வந்ததும் அவர்களே!

மேலை நாட்டவரே வியக்கும் சித்தாந்த வேதாந்தங்களையும் ஆக்கியவர்களும் அவர்களே.

வான சாத்திரத்தில் பலநூறு ஆண்டுகளூக்கு முன்பு சீரிய சிந்தனையைப் படைத்தது ஆரியப் பட்டரே! கலைகளில் இலக்கணங்களை வகுத்ததும் பிராமணர்களே! அரசியலில் சாத்திரங்களை இயற்றியதும் அவர்களே! சர்.சி.வி ராமனும் பிராமணனே. கணக்கு மேதை ராமானுஜமும் பிராமணனே!

(செக்ஸி) பால் உறவுகளையும் இலக்கணமாக்கிச் சொன்னதும் வாத்ச்யாயனர் என்ற பிராமணரே!

அண்மைக் காலத்தில் - கம்யூனிசத்தை இந்தியாவில் பரப்பியவர்களும் அவர்களே!

காந்தியாருடன் பணியாற்றிக் கொண்டே நாத்திகம் பேசிய 'கோரா 'வும் பிராமணரே!

பி.ஆர்.அம்பேத்கார் என்ற புரட்சிக்காரரின் பெயரிலுள்ள 'அம்பேத்கார் ' அவரை ஆதரித்து வளர்த்த பிராமணரின் பெயரே!

காந்தியார் என்ற வைசியரின் மகனுக்குத் தனது திருமகளைத் தந்த பிராமணர்தான் மூதறிஞர் ராஜாஜி.

அந்தப் புரட்சி வழியில் இப்போதுகூட இதயம் பேசுகிறது மணியன் தனது மனைவியின் சகோதரிக்கு மனோரமா வீட்டில் மணம் முடித்தார்!

ஆதி திராவிட வீரர்களை மணந்த பிராமணப் பெண்கள் தங்கப்பதக்கம் பெற்ற நிகழ்ச்சிகளை நாம் படங்களாகவே பார்த்திருக்கிறோம்.

ஆகவே புரட்சிக் கருத்துக்களுக்கு ஊற்றுக் காலாக ஊன்றுகோலாக முன்னோடும் பிள்ளைகளாக இருந்தவர்களும் இருப்பவர்களும் அவர்களே!

தமிழைப் பேணிக் காப்பதிலும் அவர்கள் முன்னணியில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்!

தமிழின் முதல் முனியான அகத்தியனே பிராமணன்தான்! தொல்காப்பியரைக் கூட அப்படிக் கூறுவதுண்டு! தமிழின் அழகிய பனுவல்கள் அவர்களால் ஆக்கப்பட்டதுண்டு! வடமொழிக்கு நிகரான தமிழ் இலக்கணங்களை - இலக்கியங்களை ஆக்கிட முனைந்து நின்றவர்களும் அவர்களே!

ஆரியர்கள்தான்! உலகத்தில் முதன்முதலாகத் தோன்றிய இனம்! உலகை ஆண்ட இனம் என்று கூறி வந்த கருத்துக்கு எதிராக...

தமிழனே முதலில் தோன்றிய இனம்; குமரிக் கண்டத்து நாகரீகமே - முதல் நாகரீகம் என்று ஆதாரத்தோடு பேசியவர்கள் ராகவ ஐயங்காரும் சீனிவாச ஐயங்காரும்.அழிந்துபட்ட தமிழ் நூல்களைத் தேடி எடுத்து அச்சேற்றிக் காத்த உ.வே.சுவாமிநாத ஐயருக்கு தமிழகமே கடமைப்பட்டுள்ளது.சமஸ்கிருதம் கலவாத தனித்தமிழ் இயக்கத்தின் தூண் பரிதிமாற் கலைஞர் என்ற சூரியநாராயண சாஸ்திரி.

தமிழ்க் கவிதையுலகில் புரட்சி செய்த பாரதியாரும் பிராமணரே! இன்றைக்கும் புதுக்கவிதை என்ற புரட்சியைச் செய்யும் சி.சு.செல்லப்பாவும் பிராமணரே!

காண்டேகரைத் தமிழுக்குத் தந்த கா.ஸ்ரீ.ஸ்ரீ.யும், சகல கலா வல்லவராய் இருந்து அகில இந்தியப் பத்திரிகையுலகில் சாதனை புரிந்த கல்கியும் வாசனும் பிராமணர்களே!

வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்களைக் காத்து நிற்பவர்களூம் அவர்களே!

வெளிநாட்டுக்குச் சென்றால் அந்த நாகரீகத்தை ஏற்காமல்... நமது நாகரீகம் காத்து, விடாப்பிடியாக வீடுகளில் தமிழ்பேசும் குடும்பங்களும் பிராமணக் குடும்பங்களே!

தமிழில் புரட்சி செய்து - விஞ்ஞானக் கருத்துகளை - புதுமைக் கருத்துகளைத் துணிவுடன் சொல்லிவரும் சுஜாதா போன்றவர்களும் பிராமணர்களே!

வீரமற்றவர்கள், பேடிகள் பிராமணர்கள் என்ற கருத்தும் பிழையானதே! எப்படி ?

கண்களை இழந்தபோதும் ஏற்றுக்கொண்ட கொள்கையை உரக்கக் கூவியவன் கூரத்தாழ்வான்!

முகலாய சாம்ராஜ்யத்தின் ஆதிக்கம் தென்னாட்டில் நுழைய விடாமல் ஹரிஅரபுக்கர்களை உருவாக்கிய வித்யாதரரும் பிராமணரே!

தென்னாட்டுப் போர்க்களங்களில் வீரசாகசம் நிகழ்த்தி - மைசூர் அரசை நடுநடுங்க வைத்த திருமலை நாயக்கரின் படைத் தளபதியே ராமப்பையர்தான்!

வெள்ளையனை எதிர்த்த சுதந்திரப் போரில் (வட நாட்டில்) பிராமண மன்னர்களூம், தளபதிகளும் இருந்தார்கள்.

தென்னாட்டில்... பகத்சிங்குக்கு முன்பு மணியாச்சி ஸ்டேஷனில் வெள்ளைக்காரனைத் துப்பாக்கியால் சுட்ட வீரனான வாஞ்சிநாதன் - பிராமணனே!

வெள்ளையரை கிடுகிடுக்க வைத்த ஆயுதப் புரட்சியைத் தமிழகத்தில் நிகழ்த்தியவர் வ.வே.சு. அய்யர்.

திருப்பூர் குமரனின் குருவாய் இருந்து போலீஸ் தடியடிக்கு ஆளாகி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எலும்புகளில் முறிவு ஏற்பட்ட திருப்பூர் பி.எஸ். சுந்தரம் பிராமணரே.

1938 இந்தி எதிர்ப்புப் போரில் துணிவாக ஈடுபட்டவர் சி.வி.ராஜகோபாலாச்சாரியார்!

1965-ல் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு தமது போலீஸ் வேலையைத் தூக்கி எறிந்த போலீஸ் வெ.கண்ணனும் பிராமணரே!

இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்து வீரப்பதக்கம் பெற்ற தமிழர்களில் பலர் - செங்கற்பட்டு சென்னை மாவட்டங்களைச் சார்ந்த பிராமணர்களே!

இப்போதும் மார்வாடிகளை எதிர்த்து - வட்டி வாங்குவதை எதிர்த்து சிறை புகுந்து கடுமையான வீரப்போர் நிகழ்த்துகின்ற மாவீரன் எம்.கே. சீனிவாசனும் பிராமணரே!

இதுமட்டுமில்லை; நவீன - மார்டன் துறைகளிலும் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். புதிய பாஷன்களை, புதிய டிசைன்களை விரும்பி ஏற்பதும் அவர்களே!

முன்பு இருந்த உச்சிக்குடுமியில்லை; 'ஸ்டெப்கட் 'தான்! மழுங்கச் சிரைப்பது இல்லை; கிருதாதான்; சைட் பர்ன்தான்!

மீசை வைப்பது பிராமண தர்மத்துக்கு விரோதம்; ஆனால் மீசையோடு தாடியும் வைத்து அழகாகப் பவனி வருபவர்கள் பிராமணர்கள்!

மடிசார் அதிகமாக இல்லை; மேக்சி - பெல்பாட்டம் - ஜீன்ஸ்தான் அதிகம்!

உடையில் - உணவில் - பழக்கவழக்கத்தில் மட்டுமில்லாமல் மன ஒப்பனையிலும் (மெண்டல் மேக்கப்) அவர்களுக்கு பழைய பஞ்சாங்கத் திமிர்த்தனம் கிடையாது! மேல்மதிப்பு என்ற மமதை இல்லை!

(இலக்கியத் தென்றல் அடியார்)

சட்டத்தை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கச் செய்வதிலிருந்து, அரசாங்கம் நடத்தும் பந்தை எதிர்த்து வழக்கு தொடங்குவது வரை சமூக அநீதிகளை சட்டப்பூர்வமாக தட்டிக்கேட்டு அதன் மீது அரசாங்கத்தைக் கொண்டே நடவடிக்கை எடுக்கச் செய்யும் தைரியம் எழுபத்தி மூன்று வயது பிராமணரான‌ இந்த ட்ராபிக் ராமசாமிக்கு இருக்கும் தைரியம், பிராமணர்களை கேலி செய்வதும் அவமதிப்பதிலுமே குறியாக இருக்கும் மற்றவர்களுக்கு ஏன் வரவில்லை?.

ந‌ன்றி ‍ 'ப‌குத்த‌றிவு'

இறைநாமத்தின் சக்தி



ஒரு பெண் அடியாள் தனது குருவுக்குத் தொண்டு செய்து வந்தாள். குரு எவ்வாறு சிரத்தையுடன் இறை நாமத்தை உச்சரிப்பாரோ அவ்வளவு பக்தியுடன் இப் பெண் அடியாளும் ஜெபித்துவந்தாள். பசுவின் சாணியைப் பிடித்து காயவைத்து விறகாகப் பாவிப்பதற்குத் தினமும் வேலை செய்வாள். இவ்வாறு செய்து வெயிலில் காய்வதற்காக ஒரு நாள் வைத்தாள்.

அயலில் உள்ள வேறு ஒரு பெண் இதே வண்ணம் சாணி தட்டி, அடியவளின் சாணி உருண்டைகளுக்கு அருகில் காய வைத்தாள். ஏதோ ஒருவிதமாக இருவரினதும் சாணி உருண்டைகளும் கலந்து விட்டன. அயலவள் தனக்குரிய சாணி உருண்டைகளோடு அடியவளின் சாணி உருண்டைகளிற் சிலவற்றை எடுக்க எத்தனித்தாள்.

இதனைக் கேள்வியுற்ற குருவானவர், " எனது அடியாள் உருட்டிய சாணி உருண்டைகளை மிக இலகுவாகக் கண்டுபிடிக்க முடியும் " என்று கூறிவிட்டு ஒவ்வொரு சாணி உருண்டைகளையும் எடுத்துத் தனது காதருகே வைத்தார். சிலவற்றில் இறைவனது நாமம் ஒலிப்பது கேட்டது. எதனிடம் இறை நாமம் ஒலிப்பது கேட்க முடியுமோ அவைகளை வேறாக்கினார். இவ்விதம் இரு பெண்களுக்குமிடையில் வந்த பிணக்கை நீக்கிவிட்டார்.

என்ன விந்தை; பெண் அடியாள் நின்றும், இருந்தும், கிடந்தும் எத்தொழிலைச் செய்தாலும் இறை நாமத்தை இடைவிடாது உச்சரித்த வண்ணமாகவே இருப்பதனால் அச்சொற்களைச் சாணியின் ஈரலிப்புத்தன்மை ஈர்த்தது. அது காரணமாக அச்சொற்கள் எதிரொலித்த வண்ணமிருந்தன.

இது போலத்தான் நாம் எத்தனை தடவை இறைவனது நாமத்தை உச்சரிக்கின்றோமோ அத்தனையும் நமக்கு நன்மையே. பின்னர் நீங்கள் உச்சரிக்காது இருக்கும் நேரத்தில் கூட மனதில் அதன் எதிரொலியை உங்களால் உணரமுடியும்.

ஆலயங்களில் அர்ச்சகர் மந்திரங்களை உச்சரித்து விக்கிரகத்திற்கு பூஜை, புனஸ்காரங்கள் செய்வார். அவ் விக்கிரகம் அம் மந்திரத்தினை ஈர்த்து, அதற்கான சக்தியையும் வெளிவிடும். இன்றும் சிறப்பாக, நியமத்தோடு பூஜை செய்யப்படும் விக்கிரகங்கள் மிகுந்த சக்தியோடு விளங்குவதைக் காணலாம்.


நன்றி : சுவாமி ராமதாஸ் அருளுரைகள்

ஓம்” - உயிர்களின் ஆதார ஒலி - எப்படி?

இந்து மதத்தில் சொல்லப்படும் “ஓம்” மந்திரம் உலகில் தோன்றிய முதல்
ஒலியாகக் கருதப்படுகிறது. வேதங்களும், அதைப் பின்பற்றும் உபந்யாசர்கள்,
ரிஷிகள், ஞானிகள், யோகிகள் அனைவரும் இதை ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.
அது கடவுளின் ஒலி வடிவம் என்றும் பல இடங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.
இது உண்மைதானா? உண்மை என்றால் எத்தனை பேருக்கு இதை உண்மை என்று
ஏற்றுக்கொள்ளக் கூடிய மனோபாவம் உள்ளது? இன்றைய காலத்தில் கல்வி கற்று
தர்க்க அறிவு வளர்ந்துவிட்டதால் எதையும் நம்பாத சூழல் வளர்ந்துள்ளது.
இந்தச் சூழல் மூட நம்பிக்கைகளை ஒழிக்க முற்பட்டாலும் பலர் உண்மையையும்
சேர்த்தே ஒழிக்கிறார்கள். “ஓம்” மந்திரத்தின் பலன் பற்றி பல இடங்களில்
பேசப்பட்டாலும், அதன் தோற்றம் பற்றிய கேள்வி எனது நட்பு வட்டாரத்தில்
எழுந்ததனால் விளைந்த கட்டுரை இது.

“ஓம்” தான் முதல் ஒலியா? அதை எப்படி நம்புவது?

நம்முடைய தமிழ்த் தாத்தா “வள்ளுவர்” நமக்காக திருக்குறளைக் கொடுத்து
இருக்கிறார். அது உலகம் முழுவதுக்கும் பொதுவான விதிகளைக் கொடுத்துள்ளது
என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதன் முதல் குறளில் இருந்தே என்
பயணத்தைத் துவக்குகிறேன்.

முதல் குறள்:

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.”

பொருள்:

உலகில் வழங்கி வரும் எல்லா எழுத்துகளும் “அ” என்ற எழுத்தை முதலாக உடையன.
அது போல உலகம் கடவுளை முதன்மையாக உடையது.

உங்களில் பலருக்கு இது ஏதோ பரிட்சைக்குப் படித்து எழுதுவது என்பது
போலத்தான் இருக்கும். இங்கு உள்ள இரண்டு வரிகளும் உங்களுக்கு மிக்க
பரிட்சையமான ஒன்றே. அதற்கு உண்டான விளக்கமும் நீங்கள் அறிந்ததே. ஆனால்
எத்தனைபேர் இதை ஆழமாக உணர்ந்தீர்கள்?

1. அதெப்படி அனைத்து எழுத்துகளுக்கும் “அ” முதல் ஆகும்?

2. தமிழில்தான் முதல் எழுத்து “அ”. உலகில் உள்ள மற்ற எல்லா மொழிகளுக்கும்
முதல் எழுத்து “அ” கிடையாது. பின்னர் எப்படி இந்தக் கூற்று உலகம்
முழுவதுமாக (2000 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து இன்றுவரை)
ஏற்றுக்கொள்ளப்பட்டது?

அதற்கான விளக்கத்தை என்னால் முடிந்தவரை உங்களுக்குப் புரியவைக்கிறேன்.

முதலில் எழுத்து என்பது என்ன? மனிதன், தான் உச்சரிக்கும் ஒலியின்
குறியீடுதான் எழுத்து. அதாவது “க” என்ற உங்கள் உச்சரிப்பைக் (ஒலியை)
குறிக்க பயன்படுத்துவதே “க” என்ற எழுத்து. அப்படியானால் வள்ளுவர் சொல்ல
வருவது உலகில் உள்ள எல்லா ஒலிக்கும் “அ” என்ற ஒலியே ஆதாரம். (மூலம்;
அதாவது source, origin). இது எப்படி உண்மை? மனிதன் எழுப்பும் ஒலியை
விடுங்கள், நாம் இன்னும் சற்று ஆழமாகச் செல்வோம். நாம் உயிர் வாழ ஆதாரத்
தேவையான காற்றை எடுத்துக் கொள்வோம். காற்று மலைகளின் மேல் மோதி எழுப்பும்
ஓசை என்னவாக இருக்கும்? சற்று யோசித்தால் உங்கள் அனைவராலும் அதை ஊகிக்க
முடியும். முதலில் “அ”, பின்னர் “உ” இவை இரண்டும் கலந்த கலவையாக
இருக்கும். முதலில் “அ” தான், பின்னர் தான் “உ”. ( காற்றின் ஒலி “உஸ்ஸ்”
என்று சொல்ல முனையாதீர்கள். அடைத்து வைத்த காற்று வெளிவந்தால்தான்
அவ்வாறு ஒலிக்கும் ). “அ” என்ற ஒலியை எழுப்ப முயலும்போது உதடுகளைக்
குறுக்கினால் வருவது “உ”. (உச்சரித்து பாருங்கள், உண்மை புரியும்).
காற்று மலைகளின் மேல் மோதும்போது “அ”, அது பின்னர் குறுகிய பாதையிலோ
அல்லது கீழிறங்கினாலோ “உ” என்ற ஒலி பிறக்கும்.

(காற்றின் ஒலியை ஊகிக்க முடியாதவர்களுக்கு, ஒரு செயல்முறை விளக்கம்: ஒரு
காலி சொம்பு அல்லது டம்ளர் அல்லது சிறிய பாட்டிலை எடுத்துக் கொள்ளவும்.
அதை, உங்கள் காதை முழுமையாக மூடியவாறு வைத்து அப்போது வரும் சத்தத்தைக்
கவனியுங்கள். எழும் ஒலி “உ”-ஆக இருக்கும். இப்போது அந்தப் பொருளை சிறிது
வெளியே எடுத்தும் மீண்டும் காதின் அருகே கொண்டு சென்றும் பாருங்கள்.
மீண்டும் மீண்டும் இதையே செய்து பாருங்கள். “அ” மற்றும் “உ” ஒலிகளை
நீங்கள் கேட்கலாம். உங்கள் காதருகே கொண்டு செல்லும்போது காற்று குறுகிய
பாதைக்குள் செல்வதால் “உ”, வெளியே எடுக்கும்போது விரிந்த பாதையில்
செல்வதால் “அ”. இயல்பான காற்று விரிந்த பாதையில்தான் இருக்கிறது. ஆகவே
முதல் ஒலி “அ” தான் என்பது உறுதி.)

இதையே வள்ளுவர் எல்லா எழுத்துகளுக்கும் (ஒலிகளுக்கும்) முதல் “அ”
என்றார். இத்தனை ஆழமான கருத்தை சொல்ல வள்ளுவர் எடுத்துக் கொண்டது மூன்று
வார்த்தைகள் மட்டுமே. இது இம்மையைப் ( இவ்வுலகம்) பற்றிய உண்மை.
மறுமையைப் (மறுவுலகம்) பற்றிய உண்மையைக் கூற மீதி நான்கு வார்த்தைகளை
எடுத்துக் கொண்டார். இந்த அளவிற்கு நுண்மையாக வள்ளுவர் ஆராய்ந்து
இருப்பதால்தான்,

“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள். “

என்றார் ஒளவையார்.

இவர் மட்டுமல்ல, உலகமே இன்றளவும் வள்ளுவன் சொன்ன கருத்துகளை ஏற்றுக்
கொள்கிறது. திருக்குறள் முக்காலத்துக்கும் சொல்லப்பட்ட உண்மை.

(அறிவியல் ஆதாரம்: பூமியில் முதலில் இருந்தது காற்றும் பாறையும் (மலை)
மட்டுமே. நிலம் என்ற ஒன்று இருந்தால் ஆகாயம் என்பது “default”. காற்று
குளிர்ந்தால் நீர். கல்லும் கல்லும் மோதினால் நெருப்பு. (முதலில்
நெருப்பில் இருந்து பிறந்த கல்தான் பூமி என்பது தனிக் கதை). நீரில்
இருந்து தான் உயிர்கள்.)

“அ” மற்றும் “உ” என்ற இரண்டு ஆதார ஒலிகளைப் புரிந்துகொண்ட நாம் அடுத்து
செல்லவிருப்பது “ம்” ஒலிக்கான ஆராய்ச்சி.

இந்தப் பிரபஞ்சமே அதிர்வுகளால் ஆனது என்பது அறிவியல் கூற்று. இயக்கம்
அல்லது வடிவம் என்ற ஒரு இருந்தாலே அதிர்வு என்பது நிச்சயம். இந்த அதிர்வை
(ஒலியை) எவ்வாறு குறியீடு செய்ய முடியும்? மனிதனால் கேட்க கூடிய
ஒலியளவில் இருந்தே ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். ஒரு மெல்லிய நீண்ட கம்பியை
எடுத்துக் கொள்வோம். அதன் இரு முனைகளையும் நீட்டிப் பிடித்து அதன்
நடுவில் மெதுவாகத் தட்டி அதிர்வை ஏற்படுத்தினால் எழும் ஒலியில் “ம்” என்ற
ஒலி பிரதான பங்கு வகிப்பதை உணர முடியும். ஆக அதிர்வுகளின் ஒலி வடிவம்
“ம்”. (தனியே அமர்ந்து “ம்” என உங்களால் முடிந்தவரை சத்தமாக
நீண்டநேரத்திற்கு (அடிவயிற்றில் இருந்து ) ஒலித்துப் (சொல்லி) பாருங்கள்.
உடலின் எந்த ஒரு பாகத்தின் அசைவும் இல்லாமல் (ஏன், நாக்கை கூட அசைக்கத்
தேவை இல்லை) நீங்கள் உங்கள் உடல் முழுவதும் ஓர் அதிர்வை உணரலாம்.)

ஒலிகளுக்கு எல்லாம் முதலாவதான “அ”, பின்னர் “உ”, பின் உடல் முழுவதும்
அதிர்வை ஏற்படுத்தும் “ம்” இவை மூன்றும் சேர்ந்தால் “அஉம்” . இதுவே
பின்னர் மருவி ” ஓம்” ஆனது. (”அ”, “உ” இரண்டையும் சேர்த்துச் சொன்னாலே
அது “ஒ” போல்தான் இருக்கும்.) இதைத்தான் உயிர்களுக்கு ஆதார ஒலி “ஓம்”
என்கிறது இந்து மதம்.

(அட! ஓர் ஆச்சர்யம்! ….. ஆன்மிகம் என்பது உடல், உயிர் சக்தியை
மேம்படுத்தி மனிதன் தன் வாழ்வில் இன்புற்று இருக்க வழி காட்டுவதே ஆகும்.
“ஓ” என்பது உயிர் எழுத்து, “ம்” என்பது மெய் (உடல்) எழுத்து. ஏதோ புரிகிற
மாதிரி இருக்கிறதா? புரிந்துகொள்ள முயலாமல் நீங்கள் கொட்டாவி சத்தமாகவோ/
சத்தமில்லாமலோ விட்டால்கூட வரும் ஒலி ” அ…..உ….ம்” தான்.)

“ஓம்” தான் உயிர்களின் ஆதார ஒலி; இந்த “ஓம்” என்ற ஒலி நம் பிராண
சக்தியோடு நெருங்கிய தொடர்பு உடையது. அந்தத் தொடர்பு பற்றி அறிய
விவேகானந்தர் கருத்துகள் உதவும்.

எந்நாளும் ஏகனோடிரு (இறைவனோடிரு)



எந்நாளும் ஏகனோடிரு (இறைவனோடிரு)

ஆன்மிகக் கதைகள் - 6


ஒருநாள் ஒரு சந்நியாசி ஒரு சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டின் முன் அமர்ந்து கொண்டு ஒருவன் திரிகல்லில் மா திரித்துக்கொண்டிருந்தான். அரிசித் துகள்கள் எவ்வாறு திரிகல்லுக்குள் அகப்பட்டு நெரிந்து இடிந்து மாவாகின்றதோ, அதே போன்று தானும் இப்பூவுலகாகிய திரிகல்லில் அகப்பட்டுப் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றேன் எனச் சிந்திக்க ஆரம்பித்தான். இச் சிந்தனை அதிகரித்துச் செல்லவே அது காரணமாக அழ ஆரம்பித்தான். இச் சந்தர்ப்பத்தில் முன் கூறப்பட்ட அச்சந்நியாசி அவன் அழுவதைப் பார்த்தார்.

உடன் அவன் அருகிற் சென்று " சகோதரனே ஏன் அழுகின்றாய்? " என்று விசாரித்தார்.

அதற்கு அவன் " இந்தத் திரிகல்லில் அகப்பட்டு நெரியும் அரிசி போல நானும் இவ்வுலகில் அகப்பட்டுக்கொண்டேன். அதனை நினைத்து அழுகின்றேன் " என்றான்.

அதற்கு அச்சந்நியாசியார் அவனை நோக்கி " திரிகல்லின் மேலே உள்ள சுழற்றும் கல்லை எடுத்துவிட்டு நடுவில் உள்ள கட்டைக்கருகில் உள்ள அரிசிகளைக் கவனி. கட்டைக்கருகில் உள்ள அத்தனை அரிசிகளும் நெரிபடாமல், முழு அரிசிகளாகவே இருக்கின்றன. இதோ பார்! நீயும் இறைவனை-ஏகப்பொருளை-ஏகனை சதா நேரமும் மனதில் தியானித்தவண்ணம் இருந்தாயானால் உலக வலைக்குள் சிக்கித் தவிக்கமாட்டாய். இறைவனுக்கே ஆட்பட்டுவிடுவாய்! அவ்வாறு வாழ்ந்தால் திரிகல்லின் கட்டைக்கருகில் காணப்படும் அரிசி போல நீயும் காப்பாற்றப்படுவாய். உலகில் சம்பவிக்கும் துரதிஷ்டங்கள், துன்பங்கள் வந்து உன்னைப் பற்றாது " என்றார்.

இதைக் கேட்ட அவன் உள்ளம் தெளிந்தது.


நீதி : இறைவன் மேல் மனதை நிறுத்தி, செய்யும் வேலைகளை அவருக்குச் செய்வதாகவே நினைத்து செய்யும் போது, இவ்வுலக மாயைகள் ஒருவனை எந்த விதத்திலும் துன்பத்தில் ஆழ்த்தாது. மாறாக இறைவனை மறந்து நான் என்ற அகங்காரத்தில் வேலைகளில் ஈடுபடும்போது துன்பங்கள் நம்மை எளிதில் சூழ்ந்துவிடும்.

எனவே இறைவனை நம் மனதில் எப்போதும் இருந்தி, இந்த உலக மாயைகளில் இருந்து விடுபட்டு இன்புற்று வாழ்ந்திடுவோம்.


நன்றி : சுவாமி இராமதாஸ் அருளுரைகள்

நதி போல் செல்

மிகப் பெரிய நதிகளின் உற்பத்தி ஸ்தானங்களுக்குச் சென்று பார்ப்பவர்கள் வியப்பில் மூழ்குவர். கண் முன் தெரியும் இந்த சிறிய நீர்ப் பெருக்கு போகப் போக எப்படி மகாநதியாகிப் பெரும் பிரவாகமாகச் செல்கிறது என்று காண்பதே ஓர் அதிசயம்.

இத்தனை சிறிய நீர்ப்பெருக்காக இருக்கிறோமே என்று சுய விமர்சனத்தோடு நதி அங்கேயே தேங்கி நின்று விடுவதில்லை. இருக்கும் இடத்தில் இருந்து முன்னேறுவதே அதன் லட்சியம். அப்படி முன்னேறிப் பாய்கையில் சிறு சிறு நீர்ச்சுனைகள், ஓடைகள் எல்லாம் வழியில் அதனுடன் சேர்ந்து அதன் அளவும் வேகமும் அதிகரிக்கின்றன. அப்போது கூட ஓரளவு வளர்ந்து விட்டோமே என்று பெருமிதத்துடன் தேக்கமடைந்து அது தங்கி விடுவதில்லை. முன்னேற்றமே அதற்கு முக்கியம். அது தன் பயணத்தைத் தொடர்கிறது.

வழியில் நிச்சயமாகத் தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. அத்தடைகள் மற்றவர்கள் செய்த சதி என்று புலம்பி நதி செயலற்று நிற்பதில்லை. தடை சிறியதென்றால் நதி தாண்டிச் செல்லும்; பெரியதென்றால் அதைச் சுற்றி வளைத்துச் செல்லும். தடைகளின் இயல்பு குறித்து விமர்சிப்பதும், தடைகள் தானாக விலகும் என்று காத்து நிற்பதும் தன் பயணத்திற்கு உதவாது என்பதை நதி நன்கு அறியும்.

பல இடங்களில் அதன் வழி கரடு முரடாக இருக்கும். அதைக் கண்டு நதி எப்போதும் திரும்பிப் போவதில்லை. சில இடங்களில் மிக அழகான சூழ்நிலைகளும் இருப்பதுண்டு. அதைக் கண்டு நதி அங்கே தங்கி விடுவதுமில்லை.

ராபர்ட் ·ப்ரோஸ்ட் (Robert Frost) என்ற ஆங்கிலக் கவிஞன் சாகா வரிகளில் கூறியது போல, நதி "I have miles to go before I sleep)-"நான் ஓயும் முன்னே சாதிக்க வேண்டியது இன்னமும் நிறைய உள்ளது" என அங்கிருந்தும் முன்னேறித் தான் செல்கிறது. இத்தனை தூரம் வந்து விட்டாயே, களைப்பாக இருக்குமே, சற்று இளைப்பாறிப் போ என்று யாராவது கூறினாலும் நதி இளைப்பாறுவதில்லை.

தான் செல்கின்ற இடம் எல்லாம் செழிப்படையுமாறு செய்தாலும் நதி அகம்பாவம் கொள்வதில்லை. ஒரு கர்மயோகியைப் போல் அது தன் பயணத்தைத் தொடர்கிறது. பல லட்சக்கணக்கானோர் பயன்பெறும் விதத்தில் பயணம் செய்யும் நதி, முடிவில் கடலில் தன் தனித்துவத்தை விட்டு இரண்டறக் கலக்கும் போதும் கூட கலங்குவதில்லை. வாழ்வை நிறைவாகவே முடிக்கிறது.

மனிதனே நீ நதியைப் போல் இரு. உன் ஆரம்ப நிலையை எடை போட்டுக் குறுகிய வாழ்க்கை வாழ்ந்து விடாதே. ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேறு. வழியில் கண்டிப்பாக வாய்ப்புகளைக் காண்பாய். சிறிய சாதனைகளிலேயே பெருமிதம் அடைந்து நின்று விடாதே. தொடர்ந்து சிறந்து செயல் புரி. தடைகள் வரத்தான் செய்யும். தடைகளுக்குக் காரணங்களையும், காரணமானவர்களையும் பட்டியல் போடாதே. பயனில்லை.

தொடர்ந்து முன்னேறு. பாதை கடினம் என்று பயணத்தை முடித்து விடாதே. உன் பயணத்தைப் பாதைகள் தீர்மானிக்க விட்டு விடாதே. சில சௌகரியமான நிலைகளை அடையும் போது நின்று தங்கி விடாதே. அவற்றையும் மீறி முன்னேறும் போது தான் நீ சரித்திரம் படைக்க முடியும். நதியிடம் இருந்து இந்த மகத்தான ரகசியத்தைக் கற்றுக் கொள். உன் இலக்கை அடையும் முன் இளைப்பாறி விடாதே.

உன் வாழ்க்கைப் பயணம் சிறப்பாக இருந்தால் நீ சந்திப்பவர்கள் எல்லாம் உன்னால் பயன் பெறுவர். பலர் சிறக்க நீ பயன்படுவாய். கர்வம் கொள்ளாதே. இத்தனையும் சாதித்து உன் இனிய வாழ்வை இறைவனிடம் ஒப்படைக்கும் போதும் மனிதனே நீ நதியைப் போலிரு. "நான்" என்ற உணர்வை விட்டு "எல்லாம் நீ" என ஆனந்தமாய் பரிபூரணமாய் இறைவனை சரணாகதி அடைவாயாக!

- நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்.


பயனுள்ள தகவல்கள்:

* தியானத்தின் போது மூளை அணுக்களின் பலம் கூடுகிறது. தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டியது அவசியமாகும். காலையிலோ மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். தியானத்தின் போது அவசரம் இருக்கவே கூடாது. ஏதாவது ஒரு வேலையச் செய்ய மனதில் நினைத்துக் கொண்டு தியானம் செய்ய ஆரம்பிக்கக் கூடாது. உணவு உட்கொள்வதற்கு முன் செய்ய வேண்டும். உண்ட பின் மூன்று மணிநேர இடைவெளியின் பின் தியானம் செய்யலாம்.

* யார் வாழை இலையில் சாப்பிட்டு வருகிறார்களோ அவர்களுக்குத் தலைமுடி கறுப்பாகவே இருக்கும். சீக்கிரத்தில் நரைக்காது. வாழையிலையில் தனலஷ்மி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை, கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப் பழக்கம் மேற்கொண்டவர்கள் லஷ்மி கடாட்சம் பெறுவார்கள் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். பித்த - சிலேட்டும வியாதிகள் தணியும். ( தற்போது வாழை இலை கிராம பகுதிகளில்தான் கிடைக்கின்றது, பண்டிகை நாட்களில் நகரத்தில் கிடைக்கின்றது. மேலைநாடுகளிலோ இலை கிடைப்பது இன்னமும் அரிது. ஆகையால் வாழை இலை கிடைக்கக் கூடியவர்கள் மட்டும் வாழை இலையில் உண்பது நன்று. இலை கிடைத்தும் உண்ணாது இருத்தல் போல் ஒரு அறிவற்ற செயல் வேறு எதுவும் இருக்கமுடியாது. இலை கிடைக்காதவர்கள் அவர்கள் முறைப்படியே உணவருந்தலாம். தவறில்லை.)

* சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும்.

* துளசி மாடத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்.
* சுபகருமங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல கருமங்களுக்கு சிட்டை எழுதும்போது முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான்.
* மஞ்சள் பூசிக்குளிப்பது சுமங்கலிகள் மரவு. மஞ்சள் பூசிக் குளித்துவர துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.
* இல்லங்களில் காலை, மாலை மஞ்சள் நீர் தெளித்து வர லஷ்மி கடாட்சமுண்டாகும்.
* கணபதி, சூரியன், அம்பிகை, மஹாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரேயிடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜையாகும்.
சூரியனால் உடலாரோக்கியம் பெற்று அம்பிகை ஆகிய தாயின் ஆசியால் கிடைக்கும் சிறந்த வாழ்வை அடைந்து விஷ்ணுவினால் இம்மையின்பம் பெற்று சிவபிரானால் காமக் குரோதாதி புறப்பகைகளை வென்று அஞ்ஞானம் நீக்கி மோஷத்தை அடைவதற்கு வாழ்வில் வரும் தடைகளை கணபதி அருளால் நீக்கி நற்கதி அடைவதே பஞ்சாயதன பூஜைச் சிறப்பாகும்.
* வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்வது நல்லதல்ல. இதனால் லஷ்மிதேவி சஞ்சலமான நிலையைப் பெற்று வீட்டிலுள்ளவர்களின் ஐஸ்வர்யங்களை ஏற்றத்தாழ்வுக்கு இடமாக்குவாள்.
* தீபத்தின் ஜூவாலை கிழக்குமுகமாக இருந்தால் சர்வபீஷ்டங்களும் ஐஸ்வரியமும் உண்டாகும். வடக்கு முகமாக எரிந்தால் நோய் நீங்கிச் சுகமுண்டாகும். வடகிழக்கு முகமானால் ஷேமலாபமுண்டாகும்.
* மேல் நோக்கி நெடிதாயெரியும் ஜூவாலை ஆரோக்கியத்திற்கும் சரீர சுக போகங்களுக்கும் அறிகுறியாகும்.
* சக்தி, திறமை, வீர்யம் இவற்றைச் சகல ஜீவராசிகளுக்கும் வழங்கி என்றும் மாறா இளமையுடன் திகழ்வது சூரியன். சூரிய வழிபாடு கர்மவினைகளையும், நாகதோஷம் முதலியவற்றையும் பிற சோதிடரீதியான தோஷங்களையும் நீக்கும்.
* சூரிய வழிபாடு கண்பார்வை விருத்திக்கும், இரத்த விருத்திக்கும் உகந்ததென விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. உடலில் சூரியஒளி படுவதால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ஆயுள் கூடும். விற்றமின் டி சூரியனின் ஒளியில் உண்டு. இதனால்தான் மேலைநாட்டவர் சூரிய குளிப்பு செய்கின்றனர்.
* குழந்தைகள் பிறந்தபின் ஜாதகர்மம், நாமகரணம் என்பவற்றின் போது உபநிஷ்க்ரமணம் என்ற கிரியையில் குழந்தையை சூரிய வெளிச்சம் படும்படி முதன்முதல் வீட்குக்கு வெளியே கொண்டுவருதல் உண்டு. உடல்முழுதும் நல்லெண்ணய் பூசி வெற்றுடம்புடன் இளவெயிலில் கிடத்துதலும் குறிப்பிடத்தக்கது.
* இல்லங்களில் மாலைநேரத்தில் விளக்கேற்றும்போது பூஜையறை ஜன்னலை மூடிவிட வேண்டும். வீட்டின் முன்புற வாசலை திறந்திருத்தலும், பின்பக்க வாசலை பூட்டியிருத்தலும் வேண்டும்.
* வழிபாடு முடிந்த பின் விளக்குச் சுடர் மீது சில அட்சதை மணிகளைத்தூவி அல்லது மலரொன்றை வைத்து மெதுவாக அணைத்து விடலாம். வீசி அணைத்தலும் ஊடுபற்றி எரிய விடுதலும் ஆகாது.
* அரசமரம் வழிபாட்டுக்கு உகந்ததெனினும் சனிக்கிழமை காலை வேளையில் மட்டுமே அதைப் பிரதஷணம் செய்வதும் தொட்டு வணங்குவதும் செய்யலாம். அந்நாளில் மட்டுமே லஷ்மி நாராயணரின் பிரசன்னம் அங்கு இருக்கும். மற்ற நாட்களில் தொட்டால் மூதேவியே பீடிப்பாள்.
* சமுத்திர ஸ்நானம் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்யலாம்.

மகாபாரதம் - பாகம் ஒன்று

உலகம் போற்றும் இதிகாசங்கள் ராமாயாணமும், மகாபாரதமும். ராமாயணத்தை விட மகாபாரதம் பெரியது. ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட இதில் மனித வாழ்வில் எழும் சிக்கல்களும் உண்டு. அதைத் தீர்க்கும் வழிகளும் உண்டு. இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாறு என்று கூறப்படுகிறது. மகாபாரதப்போரில் ஈடுபட்ட வீரர்கள் எண்ணிக்கை முப்பத்தொன்பது லட்சத்து முப்பத்தாறாயிரத்து அறுனூறு. பதினெட்டு நாட்கள் போருக்குப்பின் 10 பேர் தவிர அனைவரும் மாண்டனர். இறை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இதை படிக்க வேண்டும் என்பதில்லை அனைவரும் படிக்கலாம். தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை விட்டு விடலாம். இப்பதிவின் நோக்கம் எளிமையாக மகாபாரதக் கதையை சொல்ல வேண்டும் என்பதுதான். உள்ளே புகுமுன்....

பராசர மகரிஷியின் புத்திரர் வியாசர் வேதங்களை தொகுத்தளித்தவர்.இவர்தான் மகாபாரதம் என்ற புண்ணியக்கதையைக் கொடுத்தவர். பாரதத்தை எப்படி உலகுக்கு அளிப்பது என வியாசர் சிந்தித்தார்.பிரம்மனை தியானித்தார்.பிரம்மன் நேரில் காட்சிக் கொடுத்ததும் அவரிடம் பகவானே இதை எழுதுகிறவர் பூமியில் யாரும் இல்லையே என்றார். பிரம்மனும் உம்முடைய நூலை எழுத கணபதியை தியானம் செய்யவும் என்று கூறிச் சென்றார். வியாசர் கணபதியை தியானிக்க கணபதி தோன்றினார் வியாசர் அவரிடம் பாரதத்தை நான் சொல்லச் சொல்ல நீர் எழுத வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தார். வினாயகரும் ஒப்புக்கொண்டு சரி ஆனால் நான் எழுதும் போது என் எழுதுகோல் நிற்காது எழுதிக்கொண்டே போகும் இதற்கு சம்மதித்தால் எழுதுகிறேன் என்றார். இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட வியாசர் பொருளை உணர்ந்துக் கொண்டுதான் நீர் எழுத வேண்டும் என்றார். வினாயகரும் சம்மதிக்க வியாசர் சொல்ல ஆரம்பித்தார்.ஆங்காங்கு பொருள் விளங்காமல் முடிச்சுகளை வைத்து அவர் சொல்லிக் கொண்டு போக ..பொருள் அறிய கணேசன் தயங்கிய நேரத்தில்..மற்ற ஸ்லோகங்களைமனதில் கொண்டு வந்து வியாசர் சொன்னார். இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த மகாபிஷக் என்ற மன்னன் இவ்வுலகை ஆண்டு வந்தான்.அவனது புண்ணியச் செயல்களால். அவன் இறந்ததும் தேவலோகம் அடந்தான்.தேவர்களுடன் சேர்ந்து அவன் பிரம்ம தேவரை வணங்கச் சென்றான்..அப்போது கங்கை நதி கங்காதேவி வடிவில் அங்குத் தோன்றினாள்.
கங்காதேவியின் ஆடை காற்றில் சற்றே விலக அதைக்கண்ட தேவர்களும். ரிஷிகளும்.நாணத்தால் தலைக் குனிய. மோக வயப்பட்ட மகாபிஷக் மட்டும். அவளையே சற்றும் நாணமின்றி நோக்கினான். இச்சம்பவத்தால் கடும் கோபம் அடைந்த பிரம்மன் மகாபிஷக்கை பூ உலகில் மனிதனாகப் பிறந்து கங்காதேவியால் விருப்பத்தகாத சிலவற்றை சந்தித்து..துன்புற்றுப் பின் சில வருஷங்கள் கழித்து.நல்லுலகை அடைவாயாக என சபித்தார். பின் அவன் பிரதீப மன்னனின் மகனாகப் பிறந்தான்.
பிரம்மதேவர் அவையில் தன்னை நோக்கிய மகாபிஷக்கை கங்காதேவியும் கண்டு காதல் கொண்டாள்.அவள் திரும்பி வரும்போது..அஷ்ட வசுக்களை சந்தித்தாள்.அவர்கள் மனக்கவலையில் இருந்தனர்.
'தேவி..வசிஷ்டருக்கு சினம் வரும்படி நடந்துக் கொண்டதால் அவர் எங்களை மனிதர்களாக பிறக்க சபித்து விட்டார்.ஆகவே..எங்களுக்கு பூமியில் நீங்கள் தாயாகி எங்களை பெற்றெடுக்க வேண்டும்'என வேண்டினர்.
'உங்களை மண்ணுலகில் பெற்றெடுக்க நான் தயார்..ஆனால்..அதற்கு நீங்கள் விரும்பும் தந்தை யார்' என கங்காதேவி கேட்டாள்.
'தாயே! பிரதீப மன்னன் மண்ணுலகில் புகழுடன் திகழ்கிறான்.அவனுக்கு சந்தனு என்ற மகன் பிறந்து..நாடாளப்போகிறான்.அவனே எங்கள் தந்தையாக விரும்புகிறோம்.'என்றனர் வசுக்கள்.

இதைக்கேட்டு..கங்காதேவியும் மகிழ்ந்தாள்.

மீண்டும்..வசுக்கள்..'வசிஷ்டரின் சாபம் நீண்டகாலம் கூடாது..ஆகவே நாங்கள் பிறந்ததும்..உடனே எங்களை தண்ணீரில் எறிந்து..ஆயுளை முடித்து விட வேண்டும்' என்றனர்.
'உங்கள் கோரிக்கைக்கு ஒரு நிபந்தனை..புத்திரப்பேறு கருதி..ஒரு மகனை மன்னரிடம் விட்டுவிட்டு..மற்றவர்களை...நீங்கள் சொல்வது போல செய்கிறேன்' என வாக்களித்தாள் கங்கை.
வசுக்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர்.
பிரதீப மன்னன் கங்கைக்கரையில் தியானத்தில் இருந்தான்.அப்போது கங்காதேவி,,நீரிலிருந்து கரையேறி மன்னன் முன் நின்றாள்'மன்னா..உங்களுக்கு பிறக்கப் போகும் மகனுக்கு..மனைவியாக விரும்புகிறேன்' என்றாள்.
மன்னனும், 'அவ்வாறே ஆகட்டும்..' என்றான்.
பிரதிபனின் மனைவிக்கு ஒரு மகன் பிறந்தான்.அது..பிரம்ம தேவன் சாபப்படி பிறந்த மகாபிஷக் ஆகும்.அவனுக்கு சந்தனு எனப் பெயரிட்டனர்.
சந்தனு...வாலிபப்பருவம் அடைந்ததும்...அனைத்துக் கலைகளிலும் வல்லவன் ஆனான்.ஒரு நாள் மன்னன் அவனை அழைத்து, 'மகனே! முன்னர் ஒரு பெண் என் முன்னே தோன்றினாள்.தேவலோகத்துப் பெண்ணான அவள்..என் மருமகளாக விரும்புவதாகக் கூறினாள்.அவள்..உன்னிடம் வரும் போது..அவள் யார் என்று கேட்காதே! அவளை அப்படியே ஏற்றுக்கொள்! இது என் கட்டளை' என்றான்.
பின்னர், பிரதீபன்..அவனுக்கு முடி சூட்டி விட்டு..காட்டுக்குச் சென்று தவம் மேற்கொண்டான்
வேட்டையாடுவதில் விருப்பம் கொண்ட சந்தனு, ஒரு நாள் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, ஒரு அழகிய பெண் நேரில் வரப் பார்த்தான்.இருவரும் ஒருவர் இதயத்துள் ஒருவர் புகுந்து ஆனந்தம் அடைந்தனர்.
சந்தனு 'நீ யாராயிருந்தாலும், உன்னை மணக்க விரும்புகிறேன் என்றான்.
அந்த பெண்...கங்காதேவி. அவள் தன் நிபந்தனைகளை அவனிடம் தெரிவித்தாள். தன்னைப் பற்றி ஏதும் கேட்கக் கூடாது..தன் செயல்களில் தலையிடக் கூடாது..நல்லதாய் இருந்தாலும், தீதாயிருந்தாலும் தன் போக்கில் விடவேண்டும்.அவ்வாறு நடந்துக் கொண்டால்..அவனது மனையியாக சம்மதம் என்றாள்.
காம வயப்பட்டிருந்த சந்தனு,,அந்த நிபந்தனைகளை ஏற்றான்.திருமணம் நடந்தது. தேவசுகம் கண்டான் மன்னன்.
பல ஆண்டுகள் கழித்து, அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். உடன், அக்குழந்தையை கங்கையில் வீசும்படிச் சொல்ல, திடுக்கிட்ட மன்னனுக்கு..நிபந்தனைகள் ஞாபகம் வர..அப்படியே செய்தான்.இது போல தொடர்ந்து ஏழு குழந்தைகளை செய்தான்.
எட்டாவது குழந்தை பிறந்த போது..பொறுமை இழந்த மன்னன்..'இதைக் கொல்லாதே..நீ யார்? ஏன் இப்படி செய்கிறாய்? இக் குழந்தையாவது கொல்லாதே!' என்றான்.
உடன்..கங்காதேவி, 'மன்னா..இம்மகனைக் கொல்லமாட்டேன்..ஆனால், நிபந்தனைப் படி நடக்காமல்..என்னை யார்? எனக் கேட்டதால்..இனி உன்னுடன் வாழ மாட்டேன். ஆனால்..நான் யார் என்பதை சொல்கிறேன்' என்றாள்.
'நான் ஜன்கு மகரிஷியின் மகள்.என் பெயர் கங்காதேவி.தேவர்களுக்கு உதவவே..நான் உன்னுடன் இருந்தேன்.நமக்குக் குழந்தைகளாக பிறந்த இவர்கள்..புகழ் வாய்ந்த எட்டு வசுக்கள்.வசிஷ்டரின் சாபத்தால்..இங்கு வந்து பிறந்தனர்.உம்மைத் தந்தையாகவும், என்னை தாயாகவும் அடைய விரும்பினர்.அவர் விருப்பமும் நிறைவேறியது.சாப விமோசனமும் அடைந்தனர்.எட்டாவது மகனான இவன், பெரிய மகானாக திகழ்வான்.இவனைப் பெற்ற என் கடமை முடிந்தது..எனக்கு விடை தருக' என்றாள்.
கங்காதேவியின் பேச்சைக் கேட்ட சந்தனு..'ஜன்கு மகரிஷியின் மகளே! புண்ணிய புருஷர்களான வசுக்களுக்கு வசிஷ்டர் ஏன் சாபம் இட்டார்?இவன் மட்டும் ஏன் மண்ணுலகில் வாழ வேண்டும்..அனைத்தையும் விளக்கமாக சொல்' என்றான்.
கங்காதேவி..கூறத் தொடங்கினாள்.

#'மன்னா..வருணனின் புதல்வனான வசிஷ்டர் முனிவர்களில் சிறந்தவர்.மேருமலைச் சாரலில் தவம் செய்துக் கொண்டிருந்தார்.அவரிடம் நந்தினி என்ற பசு ஒன்று இருந்தது.ஒரு நாள் தேவர்களாகிய இந்த எட்டு வசுக்களும் தத்தம் மனையியருடன் அங்கு வந்தனர்.அப்போது பிரபாசன் என்னும் வசுவின் மனைவி நந்தினியைக் கண்டு..தனக்கு அது வேண்டும் என்றாள்.
மனைவியின்..கருத்தை அறிந்த பிரபாசன்..'இது வசிஷ்ட மகரிஷிக்கு சொந்தமானது.இது தெய்வத்தன்மை வாய்ந்தது..இதன் பாலைப்பருகும் மனிதர்கள் இளமைக் குன்றாமல், அழகு குறையாது..நீண்ட நாள் வாழ்வார்கள்' என்றான்.
உடனே அவன் மனைவி'மண்ணுலகில் எனக்கு ஜிதவதி என்ற தோழி இருக்கிறாள்.அவள் அழகும், இளமையும் கெடாமலிருக்க..இப்பசுவை அவளுக்குத் தர விரும்புகிறேன்'என்றாள்.
மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற பிரபாசன்..மற்ற வசுக்களுடன் காமதேனுவை கன்றுடன் பிடித்துக் கொண்டு வந்தான்.
வசிஷ்டர் ஆசிரமத்திற்கு வந்து பார்த்த போது..பசுவும்..கன்றும் களவாடப்பட்டிருப்பதைக் கண்டார்.'என் பசுவையும்,கன்றையும் களவாடிய வசுக்கள்..மண்ணில் மானிடராகப் பிறக்கட்டும் என சபித்தார்.
வசிஷ்டரின் சாபத்தை அறிந்த வசுக்கள் ஓடோடி வந்து..பசுவையும்,கன்றையும் திருப்பிக் கொடுத்து விட்டு..அவர் காலில் விழுந்து மன்னிக்க வேண்டினர்.
'பிரபாசனைத் தவிர மற்றவர்கள் உடனே சாப விமோசனம் அடைவர்.பிரபாசன் மட்டும் நீண்ட காலம் மண்ணுலகில் வாழ்வான்.அவன் பெண் இன்பத்தைத் துறப்பான்.சந்ததியின்றி திகழ்வான்.சாத்திரங்களில் வல்லவனாக திகழ்வான்,,எல்லோருக்கும் நன்மை செய்வான்' என்றார் வசிஷ்டர். வசிஷ்டரின் சாபத்தை சொன்ன கங்காதேவி..'பிரபாசன்..என்னும் வசுவாகிய இவனை..நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்.பெரியவன் ஆனதும் தங்களிடம் ஒப்படைக்கிறேன்..நானும் தாங்கள் அழைக்கும் போது வருகிறேன்'என்று கூறிவிட்டு மறைந்தாள். தேவவிரதன் என்றும், காங்கேயன் என்றும் பெயர் கொண்ட அவன்..மேலான குணங்களுடன் வளர்ந்தான். மனைவியையும், மகனையும் இழந்த சந்தனு பெரிதும் துன்ப வேதனையுற்றான். பின்..மீண்டும் நாட்டாட்சியில் நாட்டம் செலுத்த ஆரம்பித்தான்.அஸ்தினாபுரத்தை தலைநகராய்க் கொண்டு அனைவரும் போற்றும் விதமாய் அரசாண்டான். இந்திரனுக்கு..இணையானவனாகவும்..சத்தியம் தவறாதவனாகவும்..விருப்பு..வெறுப்பு அற்றவனாகவும்..வேகத்தில் வாயுக்கு இணையாகவும், சினத்தில் எமனுக்கு இணையாகவும் ..அறநெறி ஒன்றையே வாழும் நெறியாகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்தான். சந்தனு..காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது..கங்கை நதியைக் கண்டான்..இந்த நதியில் நீர் ஏன் குறைவாக ஓடுகிறது..பெருக்கெடுத்து ஓடவில்லை..என்று எண்ணியபடியே நின்றான். அப்போது ஒரு வாலிபன், தன் அம்பு செலுத்தும் திறமையால்..கங்கை நீரை தடுத்து நிறுத்துவதைக் கண்டான்.உடன் கங்காதேவியை அழைத்தான்.கங்காதேவி, தன் மகனை கைகளில் பிடித்தபடி,மன்னர் முன் தோன்றினாள். 'மன்னா..இவன் தான் நமது எட்டாவது மகன்.இவன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன்.வசிஷ்டரின் வேதங்களையும்,வேத அங்கங்களையும் கற்றவன்.தேவேந்திரனுக்கு இணையான இவனை..இனி உன்னிடம் ஒப்படைக்கிறேன்' என்று கூறிவிட்டு கங்காதேவி மறைந்தாள். தன் மகனுக்கு..சந்தனு, இளவரசு பட்டம் சூட்டினான்.தன் மகனுடன்..நான்கு ஆண்டுகள் கழித்த நிலையில்..மன்னன் யமுனை கரைக்கு சென்ற போது..ஒரு அழகிய பெண்ணைக் கண்டான்.'பெண்ணே..நீ யார்?யாருடைய மகள்?என்ன செய்கிறாய்?' என்றான்.
அதற்கு அவள்,'நான் செம்படவப் பெண்..என் தந்தை செம்படவர்களின் அரசன்..நான் ஆற்றில் ஓடம் ஓட்டுகிறேன்' என்றாள். அவள் அழகில் மயங்கிய அரசன்..அவளுடன் வாழ விரும்பி..அப்பெண்ணின் தந்தையைக் காணச்சென்றான். செம்படவன்..மன்னனை நோக்கி'இவளை உங்களுக்கு மணம் முடிக்க ஒரு நிபந்தனை.அதை நிறைவேற்றுவதாக இருந்தால்..மணம் முடித்துத் தருகிறேன்' என்றான். அந்த நிபந்தனை..என்ன? நிறைவேற்ற முடியாததாக இருந்தால் வாக்கு தரமாட்டேன்..என்றான் மன்னன். மன்னா..என் மகளுக்கு பிறக்கும்..மகனே..உன் நாட்டை ஆள வேண்டும்' என்றான் செம்படவன். நிபந்தனையை ஏற்க மறுத்த மன்னன் ஊர் திரும்பினான்.ஆனாலும் அவனால் அப்பெண்ணை மறக்க முடியவில்லை.உடலும் உள்ளமும் சோர்ந்து காணப்பட்டான். தந்தையின் போக்கைக் கண்ட தேவவிரதன்..அவனிடம் போய்..'தந்தையே தங்களின் துயரத்துக்கான காரணம் என்ன?'என்றான். மகனிடம், தன் நிலைக்கான காரணத்தைச் சொல்ல..நாணிய மன்னன்..மறைமுகமாக'மகனே..இக்குல வாரிசாக நீ ஒருவனே இருக்கிறாய்..யாக்கை நிலையாமை என்பதை நீ அறிவாயா?நாளை திடீரென உனக்கு ஏதேனும் நேர்ந்தால்..நம் குலம் சந்ததி அற்றுப் போகும்.ஒரு மகன் இறந்தால்..குலத்திற்கு அழிவு ..என சாத்திரங்கள் கூறுகின்றன.அதனால் சந்ததி எண்ணிி மனம் ஏங்குகிறேன்' என்றான்.செம்படவப் பெண் பற்றிக் கூறவில்லை.மன்னன் ஏதோ மறைக்கிறான் என தேவவிரதன் உணர்ந்தான். மன்னனின்..தேரோட்டியைக் கேட்டால், உண்மை அறியலாம் என..தேரோட்டியைக் கூப்பிட்டு விவரம் கேட்டான். தேரோட்டி'உங்கள் தந்தை ஒரு செம்படவப் பெண்ணை விரும்புகிறார்.அவளை மணந்தால்..அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு முடி சூட்டப் படவேண்டும் என்று நிபந்தனை போடுகிறார்கள்.அதற்கு மன்னன் இணங்கவில்லை.அந்தப் பெண்ணையும் அவரால் மறக்க முடியவில்லை'என்றான்.